தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
215
இந்த எண்ணத்தோடேயே வருகிற வழியில் காவிரியில் நீராடி இருக்கிறார்கள் அரசனும் அரசியும், குளித்து எழுந்தால் அரசி கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம். கழுத்திலிருந்து நழுவி ஆற்றில் விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான் அரசன்; கிடைக்கவில்லை. பின்னர் சோர்வுடனேயே கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. காவிரியிலிருந்து குடத்தில் நீர் கொண்டுவந்து திருமுழுக்கு நடக்கிறது. என்ன அதிசயம்! அந்தக் குடத்துக்குள்ளிருந்து முத்தாரம் இறைவன் முடிமேவேயே விழுகிறது. மன்னனும் அரசியும் இறைவனது அளப்பரிய கருணையை வியக்கிறார்கள்.
வழக்கமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் நடக்கும் திருவிழாக்கள் இக்கோயிலில் உண்டு. இத்துடன் பங்குனி மாதம் சித்திரை நாளில் பஞ்சப்பிரகார உற்சவம் என்று ஒன்று சிறப்பாக நடைபெறும். அன்று ஒரு வேடிக்கை; இறைவன் பெண் வேடத்தோடும் இறைவி ஆண் வேடத்தோடும் திருவீதி உலா வருவர். ஏன் இந்த வேடம் இவர்கள் அணிகிறார்கள் என்பதற்கு ஒரு புராண வரலாறு உண்டு, பிரமன் தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகிலே மயங்கி நிறை அழிகின்றான். அதனால் படைத்தல் தொழிலே செய்ய முடியாமல் திணறுகிறான். தன் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்புப் பெறத் தவம் செய்கிறான். தவத்துக்கு இரங்கிய இறைவன் இறைவியோடு பிரமன் முன்பு எழுந்தருள்கிற போதுதான் இப்படி வேடம் தரித்து வந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்கு ஒரு சந்தேகம், இந்தப் பிரமன் இறைவியின் அழகைக் கண்டு மோகித்தால் என்ன செய்வது என்று. இந்த வேடத்தில் இவர்களைக் கண்ட பிரமன் வெட்கித் தலைகுனிகிறான். பின்னர் அவன் விரும்பிய வண்ணமே அருள் பெறுகிறான். இந்தச் சம்பவத்தை நினைவூட்டவே இந்தப் பஞ்சப் பிரகார உற்சவம், அதில் இந்த வேடம்!