பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

இத்தலத்துக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள். சம்பந்தர் இத்தலத்தில் இருந்து கொண்டே கயிலாயம், மயேந்திரம், ஆரூர் முதலிய தலங்களையும் நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.

மண்ணது உண்ட அரிமலரோன் காணா வெண்ணாவல் விரும்பு மயேந்திராரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூரர் ஆதி ஆனைக்காவே

என்பது அவரது தேவாரம். செழு நீர்த்திரளாம் அப்பு லிங்கரை அப்பர் பாடியதைத்தான் முன்பே கேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,

அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை, நாளும்
இறைவன் என்று அடி சேர்வார்
எம்மை ஆளுடையாரே.

என்று பாடிப் பரவியிருக்கிறார். இப்பாடல்களை யெல்லாம் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம்; வெளியேறியும் வரலாம்.

இக்கோயிலில் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளை ஆராய்ந்து இந்தக் கோயிலைக் கட்டியவர்கள், நித்திய நைமித்தியங்களுக்கும், நந்தா விளக்குகளுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தியவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்து சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி எல்லாம் பலப்பல கல்வெட்டுக்கள், ஹொய்சல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகள் அதிகம். கடந்த 1960-ம் வருஷம் சிறப்பாகக் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்ய சுவாமிகளே இருந்து நடத்தி வைத்திருக்கிறார்கள்.