பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

227

கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே!

என்பது அப்பர் பாடல். இவ்விருவரையும் தவிர ஐயடிகள் காடவர்கோன், பொய்யா மொழிப் புலவர், தாயுமானவர் இன்னும் பலர் இத்தலத்து இறைவனைப் பாடியிருக்கிறார்கள். மாணிக்கவாசகரே தாயான ஈசர்க்கே சென்று ஊதாய், என்று கோத்தும்பியை வேண்டியிருக்கிறார். தாயுமானவரும்.

தெய்வ மறை வடிவான
பிரணவ சொரூபியே
சித்தாந்த வித்திமுதலே

சிரகிரி விளங்க வரு
தக்ஷிணா மூர்த்தியே
சின்மயானந்த குருவே.

என்று இங்குள்ள தக்ஷ்ணாமூர்த்தியையே பாடி மகிழ்ந்திருக்கிறார். இன்னும் இத்தலத்துக்கு, கோவை, உலா, யமக அந்நாதி என்றெல்லாம் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

புராணப் பிரசித்தியைவிட இச்சிராப்பள்ளி மலைமிக்க சரித்திரப் பிரசித்தியுடையது. இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உண்டு. குடைவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பல்லவ மன்னனுடைய பிரதாபங்களைக் கூறுகின்றன. காவிரியைப் பல்லவ மன்னன் தன் காதலி என்றே அழைக்கிறான். உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பர் கொடுத்த நில தானத்தைப் பற்றிய கல்வெட்டு இங்கே இருக்கிறது. பாண்டிய மன்னன் மாறன் சடையன், வரகுணன் முதலியோர்களுடையதும், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த வேங்கட தேவ மகாராயரது சாசனங்களும் இருக்கின்றன. இவைகளில் சில சிதைந்தும் போயிருக்கின்றன.