பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வேங்கடம் முதல் குமரி வரை

இது எல்லாம் தென் நாட்டில் நிலவிய சைவ வைஷ்ணவ ஒற்றுமையைக் காட்டுவதற்காக எழுந்தவை என்று தெரிந்து கொண்டோமானால் அது சமய சமரசத்தை வளர்க்க உதவும்.

இக்கோயிலில் ஒரு சிறப்பு, நாம் பார்த்த சில தலங்களில் சூரியன் கோபுரவாயில் கொடிமரம்நந்தி முதலிய எல்லாவற்றையுங் கடந்து கருவறை வந்து இறைவனைத் தழுவியிருக்கிறான் வருஷத்தில் இரண்டு மூன்று நாட்களில். ஆனால் ஒரு தலத்திலும் இறைவியை அவன் பூசித்தாக இல்லை. இத்தலத்தில் மட்டும் ஆவணி, பங்குனி மாதங்களில் மூன்று நான்கு தினங்கள் சூரியன் ஒளி, முறையே இறைவன் அம்பாள் இருவர் பேரிலுமே விழுகின்றது. இப்படிச் சூரிய ஒளி படும்படி கோயில் கட்டிய சிற்பிகள் எத்தனை கற்பனை உடையவர்களாக இருந்திருக்கவேண்டும் என்று மட்டும் எண்ணினால் நம்மை அறியாமலேயே நமது தலை அந்தச் சிற்பிகளுக்கு வணங்கும்.

இத்தலத்தில் சித்திரைத்தேர், ஆடி பதினெட்டு, மார்கழித் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடக்கின்றன. கோயிலைவிட்டு வெளிவருமுன் இக்கோயிலில் உள்ள செப்புச் சிலைகளையும் பார்த்துவிடவேண்டும். ஆனந்த நடராஜர், சிவகாமி எல்லாம் மற்றக்கோயில்களில் உள்ளவர்களைப் போலத்தான். சோமாஸ்கந்தர், திரிபுராந்தகர், சமயக் குரவர் நால்வர் எல்லாம் செப்புப்படிமங்கள். இவர்களோடு காளிகா தாண்டவத் திரு உருவம் ஒன்று. இரண்டு காலையுமே ஊன்றி அநாயாசமாக ஆகாய வீதியை நோக்கி நடக்கும் நர்த்தனர் அவர் மிக அழகான வடிவம். இவரைக் காணவே ஒரு நடை போடலாம் இந்தத் தலத்துக்கு.

இத்தலத்துக்குச் சமயக் குரவர் நால்வருமே வந்திருக்கிறார்கள். மணிவாசகரது அனுபவத்தை முன்னரே