பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வேங்கடம் முதல் குமரி வரை

பட்டனைத் திரும்ப
பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழ
நம்வினை நாசமே

என்று அடக்கமாகவே பாடி மகிழ்கிறார். இந்தப் பாடல்களையெல்லாம் பாடி மகிழ்ந்தால், அங்குள்ள நிர்வாகிகள் சொல்வார்கள், கொங்கு நாட்டில் உள்ள தலங்களில் இத்தலம் ஒன்றுதான் மூவராலும் பாடப் பெறும் பேறு பெற்றது என்று. நான் சொல்லுவேன், இக் கொடுமுடியாரைப் பாடும் பேற்றை இந்த மூவர் என்ன, சமயக் குரவர்கள் நால்வருமே பெற்றவர்கள்தான் என்று. இத்தலத்து இறைவன் பாடல் உகந்த பெருமான் என்றும் தெரிகிறது. நால்வரது பாடல் பெற்றதோடு அவர் திருப்தியடையவில்லை, கபிலதேவ நாயனாரின் பாடல் ஒன்றையும் பெற்றிருக்கிறார். பதினோராம் திருமுறையில் இரட்டை மணிமாலையில் ஒரு பாட்டு, நல்ல அகத்துறையில் அமைந்திருக்கிறது. ஒரு பெண் கொடுமுடியாரிடம் காதல் கொண்டு வாடுகிறாள். அந்தப் பெண்ணின் தாய் இறைவனிடம் சென்று இப்படி அவள் நாளுக்கு நாள் மெலிந்து வாடி நைய விடலாமா? என்று கேட்கிறாள். இந்தக் கேள்விதான் பாட்டாக வருகிறது கபில தேவ நாயனாரது வாக்கில்.

நிறம் பிறிதாய், உள் மெலிந்து
நெஞ்சு உருகி வாளா
புறம் புறமே நாள் போக்கு
வாளோ? - நறுந்தேன்
படுமுடியாய் பாய்நீர்
பரந்து ஒழுகு பாண்டிக்
கொடு முடியாய்! என்றன் கொடி

பாடலைப் பாடிப்பாடி மகிழலாம். இந்தப் பாடல் நம் உள்ளத்தை உருக்குகிறது.