பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

257

இக்கோயிலில் கல்வெட்டுக்கள் நிறைய உண்டு. இத்தலம் 'அதிராஜ மண்டலத்துக் காவிரி நாட்டுக் கறையூர் திருப்பாண்டிக் கொடுமுடி யென்றும், இறைவன் பெயர் திருப்பாண்டிக் கொடுமுடி மகாதேவர், ஆளுடைய நாயனார்' என்றும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன் கோனேரின்மை கொண்டான், கொங்கு மன்னன் வீரநாராயண ரவிவர்மன் முதலியோர் கல்வெட்டுக்களின் மூலம் இங்கு பள்ளிக்கொண்ட பெருமாள், பெரிய திருவடி, இளைய பிள்ளையார் முதலியவர்கள் எழுந்தருளிய விவரமும் கோயில் பூசனை, திருவிழா திருப்பணிகளுக்கு ஏற்படுத்திய நில தான விவரங்களும் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வார் ஆராயட்டும். நாம் இறைவன், இறைவி, பெருமாள், பிரம்மா முதலியவர்களை வணங்குவதோடு அங்குள்ள முருகனை, அருணகிரியாருடன் சேர்ந்து 'குரு எனச் சிவனுக்கருள் போதா? கொடுமுடி குமரப் பெருமாளே!' என்று பாடிப் பரவி விட்டுத் திரும்பி வந்து விடலாம்.

ஊரை விட்டுத் திரும்புமுன், அங்குள்ள அன்பர்கள் ஊருக்குத் தென்மேற்கு மூலையில் தேரோடும் வீதியில் உள்ள மலையம்மன் கோயிலுக்கும் அழைத்துச் செல்வர். பர்வத வர்த்தினியே அங்கு கன்னிக் கோல உருவில் எழுந்தருளியிருக்கிறாள். அம்மன் சந்நிதியில் நந்தி இருக்கிறது. இன்னும் அக்கோயிலுள் நாகநாதர், ஆனந்த வல்லி, பேச்சியம்மாள், கருப்பணசாமி முதலியவர்களது சந்நிதிகளும் இருக்கின்றன. இவர்களையுமே பார்த்துவிட்டு ரயிலேறி ஊர் திரும்பலாம்.