பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

வேங்கடம் முதல் குமரி வரை

சந்நிதியில் வந்து பிரார்த்தனை செய்து கொள்பவர் பில்லி சூனியம் முதலியவைகளினின்றும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.

நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு துவாரம். அதன் வழியே அனுமாரைப் பார்க்கலாம். இந்தத் துவாரம், நரசிம்மரது கால் அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பர். அனுமனது கண்கள் நரசிம்மரது திருவடிகளில் பதிந்திருக்கிறது என்று இதனைக் காட்டவே இதனைச் செய்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுவர். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டே வெளியே வந்து வடக்கு நோக்கி மலையைச் சுற்றலாம். மலையை அரை வட்டம் சுற்றினால் ரங்கநாதர் சந்நிதி செல்லும் படிக்கட்டுகள் வந்து சேரலாம். படிகள் அதிகம் இல்லை . ஆதலால் ஏறுவது சிரமமாக இராது. இவற்றை ஏறிக் கடந்தால் முன் மண்டபத்தோடு கூடிய ஒரு குடைவரைக் கோயிலுக்கு வந்து சேருவோம். இக்கோயிலுள் ரங்கநாதர் கார்க்கோடகன் பேரில் தெற்கே தலையும் வடக்கே காலுமாக நீட்டிப் படுத்துக் கொண்டிருப்பார்.

ரங்கநாதர் கார்க்கோடகன் இருவரையும் உள்ளடக்கிய மண்டபம் எல்லாம் கல்லைக் குடைந்து செய்தவை. அரங்க நாதர் காலடியில் கற்சுவரில் சங்கர நாராயணன் வேறே காட்சி கொடுப்பார், இன்னும் தேவர்கள் முனிவர்கள் எல்லாம் இக் குடைவரையில். இம்மலையைக் குடைந்து குடைவரை கட்டியவனும் மகேந்திர வர்ம பல்லவனே. நல்ல மலையைக் கண்ட இடங்களில் எல்லாம் குடைவரை அமைக்கத் தோன்றியிருக்கிறது அவனுக்கு. இனி இதற்குப் பக்கத்தில், வெகு காலத்துக்குப் பின்னால் கட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கும் ரங்கநாயகித் தாயாரையும் வணங்கலாம். கார்க்கோடகன் எப்படி மலைவழி ஏறி வந்து அரங்க நாதனுக்குப்பாயலாய் அமைந்தான் என்பதையுமே காணலாம். அவன் மலைமீது ஏறிவந்த தடம் இன்னும் கரிய நிறத்திலேயே இருக்கிறது.