பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

வேங்கடம் முதல் குமரி வரை

மாலோன் மருகனை, மன்றாடி
மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான
தெய்வத்தை, மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச்
சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான்முகனே

என்று பாடி மகிழ்கிறார். இந்த அருணகிரியார் இந்தச் செங்கோட்டுவேலனிடம் மிக ஈடுபாடு உடையவர் என்று தெரிகிறது. கந்தர் அலங்காரத்தில் அவனுக்கு என்று எட்டுப் பாட்டை ஒதுக்கி விடுகிறார். இன்னும் கந்தரனுபூதி, திருப்புகழ் பாடும் போதும் இவனை மறக்கவில்லை. கிழக்கு நோக்கி நிற்கும் இந்த வேலன் வலதுகரத்தில் வேலும் இடது கரத்தில் கோழிக் கொடியுடனும் நிற்கிறான். உற்சவ மூர்த்தமாக நிற்கும் வேலவனோ வள்ளி தெய்வயானை சகிதமாகவே நிற்கிறான். இவனைக் கண்டு தொழாது மேல் நடக்க இயலாது. இக்கோயிலின் முன் மண்டபம் நல்ல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. சந்நிதிக்குச் சென்றதும் மகா மண்டபத்தில் நாம் முதலில் காண்பது அர்த்தநாரீசுவரரின் உற்சவ மூர்த்தத்தையே. செப்பு வடிவத்தில் சிறந்த வடிவம். தலையிலே சடைமுடிக்குப் பதிலாக ஓர் 'ஆண்டாள் கொண்டை' மற்றப்படி இடப் பாகம் எல்லாம் பெண்மையும் வலப்பாகம் ஆண்மையும் நிறைந்திருக்கும். வலப்பாகத்தில் மற்ற அர்த்தநாரியில் இல்லாத விதத்தில் ஒரு கோலை மிடுக்காக ஏந்தியிருப்பார். இன்னும் இம் மூர்த்திக்கு இரண்டே திருக்கரங்கள் என்பதும் உய்த்துணரத் தக்கது. இந்த வடிவினையே மாணிக்கவாசகர்,

தோலும் துகிலும், குழையும்
சுருள் தோடும்