பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

275

பால் வெள்ளை நீறும்
பசுஞ் சாந்தும், பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்
உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!

என்று பாடியிருக்கிறார். இந்த வடிவினை இந்தப் பாட்டோடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு தொண்டு கிழ முனிவர் மூன்றுகால்களுடன் இவர் காலடியில் நிற்பதைக் காண்போம். இவர் யார் என்று விசாரித்தால் அவர்தாம் பிருங்கி முனிவர் என்பார்கள். பிருங்கி சிவனையே தொழுபவர்; சக்தியை வணங்காதவர். இது சக்தியாம் அன்னைக்கு அவமானமாக இருந்திருக்கிறது. அதற்காக இறைவனிடம் வேண்டி அவர் உடலிலேயே பங்கு பெற்றிருக்கிறாள். அப்போதுகூட பிருங்கி வண்டு உருவெடுத்து இந்த அர்த்தநாரி வடிவத்தைத் துளைத்துச் சிவனை மாத்திரம் வலம் வந்து வணங்கினாராம். அப்படி வணங்கும்போது தம் உடலில் உள்ள சதையை எல்லாமே உதறி எலும்பும் தோலுமாகவே நின்றிருக்கிறார். அதனால் இறைவன் இவருக்கு மூன்றாவது கால் கொடுத்திருக்கிறார்.

இனி வடக்கு நோக்கிச் சென்றால் மூலவராம் அர்த்தநாரீசுவரரைக் காணலாம். நல்ல வெண்மை நிறத்தில் உற்சவ மூர்த்தம் போலவே இருப்பார். காலடியில் நீர் ஊறிக்கொண்டிருக்கும். மேற்கு நோக்கி நிற்கிறார் இவர். ஆனால் மேற்கு நோக்கி வாயில் கிடையாது. ஒரு சித்திரப் பலகணிதான் அங்கு உண்டு. இப்படி நிற்கும் அர்த்தநாரியைக் கண்டுதானே சம்பந்தர்,

வெந்த வெண்ணீறு அணிந்து,
விரிநூல் திகழ் மார்பில் நல்ல