32. அவிநாசி அப்பர்
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான்பெருமாள் என்னும் மலைநாட்டு மன்னனுடைய சிறந்த நண்பர். அந்த நண்பரது அழைப்பின்பேரில் அவர் இருந்து அரசு செய்த திருவிஞ்சைக் களத்துக்கே செல்கிறார். சோழ நாட்டிலிருந்து சேரநாடு செல்லும் வழியில் கொங்கு நாட்டையும் கடக்கிறார். வழியில் புக்கொளியூர் என்ற சிற்றூருக்கு வருகிறார். அங்கு அந்தணர்கள் வாழ்கிற ஒரு தெருவழியாக அவரும் அடியவர்களும் நடக்கும்போது ஒரு வீட்டில் மங்கல வாத்தியங்கள் ஒலிப்பதைக் கேட்கிறார். அதே சமயத்தில் எதிர் வீட்டிலிருந்து அழுகை ஒலி எழுவதையுமே கேட்கிறார். அங்கு சற்றுத் தயங்கி நின்று இப்படி ஒரு குடும்பத்தினர் குதூகலிக்கவும் மற்றொருவர் கதறி அழவும் காரணம் என்ன என வினவுகிறார். அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். *ஐந்தாண்டுகளுக்கு முன் ஐந்து வயது நிரம்பிய அந்தணச் சிறுவர்கள் இருவர் பக்கத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களில் ஒருவனைக் குளத்தில் கிடந்த முதலை இழுத்துச் சென்று