பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33. பேரூர்ப் பட்டீசர்

துரையில் வாழ்கிறார் ஒரு கவிஞர். அவருக்குக்குளிர் சுரம். அந்தக் காய்ச்சலில் துவண்டு விடுகிறார். பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் வந்து பார்க்கின்றனர், காய்ச்சல் குறையக் காணோம். ஒரு மாதம் முப்பது நாளுக்குமேல் நோயில் அவதி உறுகிறார். கடைசியில் நாட்டு வைத்தியர் ஒருவர் வருகிறார். ஏதோ சிந்தூர மருந்து ஒன்று கொடுக்கிறார். இரண்டே தினங்களில் குணம் அடைகிறார் கவிஞர். கவிஞருக்கு நாட்டு வைத்தியரிடம் மிக்க மதிப்பு உண்டாகிறது. நோய் முற்றிலும் குணம் அடைந்து தலைக்குத் தண்ணீர் விடுகின்ற நாளிலே வைத்தியர் கவிஞர் வீட்டுக்கு வருகிறார். அவரையும் அவரது வைத்தியத்தையும் பலரும் பலப்படப் பாராட்டுகிறார்கள். கவிஞர் குடும்பத்தாரும் வைத்தியருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம் எல்லாம் வைத்துக் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால் வியாதியால் நலிவுற்ற உடல் தேறிய கவிஞரது பாராட்டு ஒரு பாட்டாகவே வருகிறது. வைத்தியர் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. அவர் தந்தையார் பெயர் வீரபத்திரப் பிள்ளை என்பதையும் கவிஞர் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் பாடுகிறார்.