பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

67

ஆனால் ஆழ்வாரோ இதற்கு இணங்கவில்லை. 'மடல் அங்கேதான் மதில் இங்கேதான்' என்று சொல்லி அரங்கன் வேண்டுகோளையே தட்டிக் கழித்திருக்கிறார். அத்தனை ஆர்வம் ஆழ்வார்க்கு நம்பியிடம்.

கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் பின்னர் வந்த மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. அதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரிபுவன சக்கரவர்த்தி சடாவர்மன் சுந்தரபாண்டியன் நறையூரில் நின்றருளிய எம்பெருமானுக்கு ஒரு தலத்தையே சாஸனம் செய்திருக்கிறான். தஞ்சை ரகுநாத நாயக்கன் நாச்சியாருக்கு ஒரு மண்டபம் கட்டியிருக்கிறான்.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ தகவல்கள். நமக்குத் தகவல்கள் எதற்கு, நாச்சியாரும் நம்பியும் ஆட்கொள்ள முனைந்து நிற்கும்போது.