பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. அழகர் கோயில் அழகன்

கோவையில் ஒரு பட்டி மண்டபம். "அழகை ஆராதணை பண்ணியவள் ஆண்டாள்; அறிவை ஆராதனை பண்ணியவர் மாணிக்கவாசகர். இருவரது ஆராதனையில் எவரது ஆராதனை சிறந்தது?” என்பது விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள், ஆண்டாள் பாசுரங்களையும், மாணிக்கவசாகரது திருவாசகப் பாடல்களையும் அலசி ஆராய்ந்து விவாதித்தனர், விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். பட்டி மண்டபத்தின் தலைமையை ஏற்றிருந்த நான் விவாதத்தில் தீர்ப்புக்கூறி முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது. அந்த வேலை எவ்வளவு சிரமமானது என்பதை அப்போது உணர்ந்தேன். நான் சொன்னேன், “அழகு சிறந்ததா? அறிவு சிறந்ததா? என்பது விவாதம் அல்ல. ஆராதனைக்கு உரியவைகளில் அறிவு சிறந்ததா, அழகு சிறந்ததா? என்பதுதான். அறிவுடைமை அழகுடைமையை விடச் சிறந்ததுதான். என்றாலும் அறிவு இறைவன் தன்மைகள் என்ன என்று விவகரித்து அதில் தெளிவு காண உதவுமே அன்றி ஆராதனைக்கு உரிய ஒன்றாக அமைதல் இயலாது. ஆனால் ஆராதனைக்கு உரியதாக இறைவனது அழகுதான் உதவுதல் கூடும்” என்று பீடிகை போட்டு, ஆண்டாள் தன் காதலனது அழகை எப்படி எப்படி அனுபவித்து ஆராதனை பண்ணுகிறாள் என்று பல பாசுரங்களை மேற்கோளாகக் காட்டினேன். திருவரங்கத்து அழகனைக் கண்ட காதலித்து நிற்கும் அவள் நிலையை விளக்கும் பாடல் இதுதான், தன் தோழியைப் பார்த்துப் பேசுகிறாள் ஆண்டாள்.

எழில் உடைய அம்மனையீர்!
என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர், வாய் அழகர்
கண் அழகர், கொப்பூழில்