பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

131

வைத்தகு மனுவாய் ஓதக்
கரக நீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர்
தொழுது பூமாரி பெய்தார்.

இதனையே கல்லில் வடித்து நிறுத்துகிறான் ஒரு சிற்பி, அச்சிற்ப வடிவமே கம்பத்தடி மண்டபத்தில் தென்கிழக்குத் தூணில் நிற்கிறது.

கம்பத்தடி மண்டபத்துக்கு வருமுன் கோயில் உள்ளே வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிக்கொண்டு நிற்கும் கற்பகத்தையும் கண்ணாரக் கண்டு வணங்கலாம். வலது காலையே ஊன்றி நடனம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு வருந்திய ராஜசேகர பாண்டியனைத் திருப்தி செய்யக் கால் மாறி ஆடினான், அந்த நடராஜன் என்பது வரலாறு, கம்பத்தடி மண்டபத்தில் எண்ணரிய சிற்பங்கள், எல்லாம் சிலைவடிவில். அக்கினி, வீரபத்திரர், ஊர்த்துவத் தாண்டவர், காளி காலசம்ஹாரர், காமதகனர், ரிஷிபாந்திகர் முதலிய சிற்ப வடிவங்கள் எல்லாம் அழகானவை. கம்பத்தடி மண்டபத்துக்கு வடக்கே நூற்றுக்கால் மண்டபம் இருக்கிறது. அதனையே நாயக்கர் மண்டபம் என்பர். அடுத்த வெளிப்பிராகாரத்துக்கு வந்தால் அங்குதான் அரியநாத முதலியார். ரதி முதலிய சிற்பங்களைத் தாங்கிய ஆயிரங்கால் மண்டபம். வீர வசந்தராய மண்டபம். சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையேதான் கல்யாண மண்டபம். இதையெல்லாம் பார்த்தபின் ஆடி வீதியில் ஒரு சுற்றுச் சுற்றினால் வடக்கு வாயில் பக்கம் சங்கீதத் தூண்களையும் காணலாம். இனி வெளியே வந்தால் பிரபலமான புது மண்டபம் இருக்கிறது. அங்கே எல்லா இடத்தையும் கடைகளே அடைத்துக் கொண்டிருக்கும். இதற்கிடையிலே உள்ள ஊர் மண்டபத்தில் திருமலை நாயக்கரது குடும்பம், கல் யானைக்குக் கரும்பு அருத்திய சித்தர், கரிக் குருவிக்கு உபதேசித்த குருநாதன் சிலா வடிவங்களையும் காணலாம்.

கோயிலை நன்றாகப் பார்த்து விட்டோம். இத்தலத்துக்கு மதுரை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா?