பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. குற்றாலத்துறை கூத்தன்

சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் அன்று இருந்த பேராசிரியர்களில் பலர் ஸ்காட்லாந்து தேசத்தவர். அந்தக் கல்லூரியில் ஒரு விழா. விழாவுக்கு கல்லூரியின் பழைய மாணவரான ரஸிகமணி டி. கே. சி. யை அழைத்திருந்தார்கள் விழா நடக்கும் போது டி. கே. சி. யின் பக்கத்தில் ஒரு பேராசிரியர் உட்கர்ந்திருந்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பேராசியருக்கு இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் என்றால் என்னவோ ஏளனம். பேச்சோடு பேச்சாகக் கேட்டார் அவர் கே. சி. யிடம்: “நாங்கள் இயற்கையை மிகவும் மதிப்பவர்கள். மரங்கள் என்றால் எங்களுக்கு மிக மிகப்பிரியம். நீங்கள் அப்படி இல்லைதானே?” என்று. அதற்கு டி. கே. சி. சொன்ன பதில் இதுதான். “மரங்களிடம் எங்களுக்குப் பிரியம் கிடையாது. அதனிடம் நாங்கள் பக்தியே செலுத்துகிறோம். எங்கள் கோயில் எல்லாம் ஒவ்வொரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. ஏன், மரத்தையே கடவுளாகப் பாவிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள் நாங்கள். நான் இருக்கும் குற்றாலத்திலே கோயிலுள் இருப்பது ஒரு பலாமரம். மரத்தின் இலை பலாப்பழம், பழத்துக்கு உள்ளிருக்கும் சுளை, சுளைக்குள்ளிருக்கும் கொட்டை எல்லாவற்றையுமே சிவலிங்க வடிவில், இறைவனது வடிவில் கண்டு மகிழ்கிறவர்கள் நாங்கள்” என்றெல்லாம் சொன்னார். மேற்கோளாக,

கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம்
சதுர்வேதம், கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம், கனி எலாம்
சிவலிங்கம், கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம், வித்து எலாம்
சிவலிங்க சொரூபமாக
விளையும் ஒரு குறும்பலாவின் முளைத்து எழுந்த
சிவக் கொழுந்தை வேண்டுவோமே!