பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வேங்கடம் முதல் குமரி வரை

சந்நிதிக் கோபுரமே அழகு வாய்ந்தது. கோயிலுள் இருக்கும் பொற்றாமரைக் கரையில் நின்று பார்த்தால் அதன் காம்பீர்யம் தெரியும். இக்கோயிலின் சிற்புச் சிறப்புக்கள் எல்லாம் பிரசித்தம். நாயக்கர் காலச் சிலா வடிவங்கள் அனந்தம். மகா மண்டபத்திலே வீர பத்திரன், அர்ச்சுனன், கர்ணன் முதலியோர் சந்நிதி, வாயிலையே அணி செய்கின்றனர். ஆண்மைக்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாகக் குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள்.

இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைவிடச் செப்புச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்குள்ள நடராஜரும் சிவகாமியும் உருவிலே பெரியவர்கள். ஏன்? திருவிலேயும் பெரியவர்கள்தான். அவர்கள் இருக்குமிடமே பெரிய சபை. கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்திலே நடராஜர் என்றால் ஐந்து அடி உயரத்திலே சிவகாமி, இருவரும் இருக்க வேண்டியது, தலத்துக்கே சிறப்பான தாமிர சபையில். ஆனால் எடுக்க வைக்க இருக்கும் சிரமம் கருதித் தனிக் கோயிலிலே மூலமூர்த்திகளாகவே இவர்கள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறார்கள். விரித்த செஞ்சடையோடு ஆடவில்லை இந்த நடராஜர். பாண்டிய மன்னர்கள் வடித்த நடராஜர் சிலாவடிவங்கள் எல்லாவற்றிலுமே கட்டி முடித்த சடைதான். இன்னும் ஓர் அதிசயம் இக்கோயிலிலே, வேணுவனநாதனின் கருவறையை அடுத்த வட பக்கத்திலே நெல்லைக் கோவிந்தர் நன்றாகக் காலை நீட்டிப் படுத்திருக்கிறார். அவர் பக்கத்திலே கரகம் ஏந்திய கையராய் மகாவிஷ்ணு நின்று கொண்டிருக்கிறார். தங்கையை மணம் முடித்துக் கொடுக்கும்போது தாரை வார்த்துக் கொடுக்க வந்த அவசரம் போலும். நல்ல அழகான வடிவம், இந்த நெல்லை கோவிந்தரின் செப்புச்சிலை. இன்னும் ஆறுமுகனுக்கு ஒரு பெரிய சந்நிதி, அவனைச் சுற்றி வந்து ஆறு முகங்களையுமே கண்டு களிக்க வசதி செய்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.

புராணப் பிரசித்தியும், சரித்திரப் பிரசித்தியும் உடைய இக்கோயில் நல்ல இலக்கியப் பிரசித்தியும் உடையது. தலபுராணம்