பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25. ஸ்ரீ வைகுந்தத்துக் கள்ளப்பிரான்

காதல் வயப்பட்ட பெண் தன் காதலனுக்குத் தூது அனுப்புவது இயற்கை. அப்படியே ஒரு பெண் திருவரங்கநாதனிடமே காதல் கொள்கிறாள். அவனோ உதாசீனமாக இருக்கிறான். ஆதலால் தூதனுப்ப விரைகிறாள். சாதாரணமாகத் தோழியரையோ, கிளிகளையோ, அன்னங்களையோ, வண்டுகளையோ, தூதனுப்பவது தானே வழக்கம். இவள் நினைக்கிறாள், இவர்களையெல்லாம் அனுப்பினால் அவர்கள் இவளை வஞ்சிக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? ஆதலால் தனக்கு உற்ற துணையாக இருக்கும் நெஞ்சையே தூது அனுப்புகிறாள். ஆனால் நடந்தது என்ன? சென்ற நெஞ்சு திருவரங்கனை வணங்கி, தூது சொல்லிவிட்டுத் திரும்பாமல் அவன் அகன்ற மார்பின் அழகிலே லயிக்கிறது. கடைசியாகத் தான் வந்த காரியத்தை மறக்கிறது. ஏன், தன்னையுமே மறந்து விடுகிறது. அப்புறம் எப்படித் தூது சொல்லி மீளுவது? இப்படித் தன் உள்ளங்கவர்ந்த கள்வனாம் அரங்கனது காதலை வெளியிடுகிறாள் பெண் ஒரு பாட்டிலே, பாடியவர் திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். பாடல் இதுதாள். தோழியிடம் கூறுவதாகப் பாவனை.

நீர் இருக்க, மடமங்கைமீர்! கிளிகள்
தாமிருக்க, மதுகரம் எல்லாம்
நிறைந்திருக்க, மட அன்னம் முன்னம் நிரை
யாயிருக்க, உரையாமல் யான்
ஆரிருக்கினும் என் நெஞ்சம் அல்லது ஒரு
வஞ்சமற்ற துனை இல்லை என்று
ஆதரத்தினோடு தூது விட்ட பிழை
யாரிடத்து உரை செய்து ஆறுகேன்