பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

225

கொடுமைகள் அதிகம் ஆகின்றன. உடனே தந்தையின் வாக்கைப் பரிபாலிக்க நவ வீரர்களை உடன் அழைத்துக் கொண்டு போருக்குப் புறப்படுகிறான். அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து அனுப்புகிறாள்.

இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கு ஆனவர்கள் தாராகாசுரனும் கிரௌஞ்சமலையும்தான். மண்ணியாற்றங்கரையில் உள்ள சேய்ஞ்ஞலூரில் சிவபிரானை வணங்கி, சூரபதுமன் இருக்கும் வீரமகேந்திரத் தீவை நோக்கி வருகிறான். திருச்செந்தூரில் முகாம் செய்து கொண்டு வீரபாகுவைத் தூதனுப்புகிறான். சூரபதுமன் சமாதானத்துக்கு இணங்க வில்லை. அவனும் போருக்குப் புறப்படுகிறான். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும், சிங்கமுகாசுரனையும் கொன்று குலிக்கிறான். ஆறு நாட்கள் நடக்கிறது போர். கடைசியில் போர் சூரபதுமனுக்கும் முருகனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரில் அன்னை தந்த வேலைப் பிரயோகித்து சூரனைச் சம்ஹாரம் செய்கிறான். திருச்செந்தூர் உற்சவங்களில் சிறப்பான உற்சவம் கந்த சஷ்டி உற்சவம்தான். வேற்படையால் இரு கூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறைத் தன் கொடியாகவும் அமைத்துக் கொள்கிறான் முருகன், இப்படி சூரபதுமனைத் தன் வாகனமாகவும் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். அந்த விசுவரூப தரிசனம் கண்ட் சூரபதுமனோ

கோலமா மஞ்ஞை தன்னில் -
குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்றிருந்தேன் அந்நாள்
பரிசு இவை உணர்ந்திலேன் யான்
மால் அயன் தனக்கும், ஏனை
வானவர் தமக்கும், யார்க்கும்
மூல காரண்மாய் நின்ற
மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ .

.

வே.மு.வ-15