பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

57

கோயில் விளக்குக்கு நாற்பது சுழஞ்சு பொன் கொடுத்தது. விளக்கெரிக்க. ஐம்பது ஆடுகள் வழங்கியது. கோயில் திருவிழாவுக்கு நெல் அளந்தது, கோயிலுக்கு நெல்லும் பொன்னும் ஒரு வணிகன் அளித்தது எல்லாம் தெரிகின்றன. திருப்புத்தூர் சடை யார் ஜயங்கொண்ட, வினகராழ்வார் கோயிலில் கூட, நாலோக வீரன் சந்தி என்று கோயிலில் ஏற்படுத்தியது, தேவாரம் பாடத் தானம் வழங்கியது முதலிய தகவல்களுமே கிடைக்கும். ஆளுடைய பிள்ளையால் சம்பந்தர் சந்நிதியில் பூசைக்குப் பொருள் கொடுத்தது. பாண்டியன் ஸ்ரீவல்லபதேவன் அரசி உலக முழுதுடையான் கோயில் மடைப்பள்ளி கட்டியது. கணிகை ஒருத்தி கோயில் திருவிழாக் காசுக்கு ஒரு திருவுருவம் எடுப்பித்தது- இன்னும் எண்ணற்ற தகவல்கள் தமக்கு இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும். அவகாசம் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வடமேற்கு பதினைந்து மைல் தொலைவில் உள்ள பிரான்மலைக்கும் சென்று திரும்பலாம். பிரான்மலை வேள்பாரி இருந்து அரசாண்ட இடம் என்பர். அதனைக் கொடுங்குன்றீ என்றே அன்று அழைத்திருக்கின்றனர்; கொடுங்குன்றோரும், குயிலமிர்த நாயகியும் அங்கே கோயில் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தர் பாடியிருக்கிறார்.

வானில் பொலிவு எய்தும்
மேகம் கிழித்து ஓடி
கூனற் பிறை சேரும் குளிர்
சாரல் கொடுங்குன்றம்
ஆளிற் பொலிவயர்ந்து
அமர்ந்தாடி உலகேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான் திரு நகரே.

என்பது சம்பந்தர் தேவாரம். கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. மலைமேல் ஏறிச் சென்றால் அங்கு பைரவர் சந்நிதியும், இருக்கின்றன. அங்குள்ளவர் கல்யாணக் கோலத்தில் இருக்கிறார். தேவ சபை என்று ஒரு மண்டபமும் இருக்கிறது.

பிரான்மலையில் உள்ள முருகன் அருணகிரியாரது திருப்புகழ் பாடும் பெருமை பெற்றவன். இவர்களையும் கண்டு வணங்கி விட்டுத் திரும்பலாம்.