பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. திருக்கோட்டியூர் திருமால்

பல்லவ மன்னர்களில் நந்திவர்மன் என்பவன் ஒருவன் தெள்ளாற்றில் நடந்த போரில் வெற்றி பெற்றதன் காரணமாக தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று சரித்திரப் பிரசித்தி பெற்றவன் அதைவிட நந்திக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் மூலமாக இலக்கியப் பிரசித்தியும் உடையவன். நந்திக் கலம்பகம் எழுந்த வரலாறு மிகமிக ரஸமானது. இந்தப் பல்லவ மன்னன் நந்திக்கு ஒரு சகோதரன்; காடவர்கோன் என்று. இருவருக்கும் தீரா பகை, பகை முற்றிய பொழுது நந்தி தன் தம்பியை நாடு கடத்தி விடுகிறான். தம்பியோ கவிஞன். போரில் வெல்ல முடியாத அண்ணனை, அறம் வைத்துக் கலம்பகம் ஒன்று பாடி முடித்துவிடக் கருதுகிறான். அப்படியே பாடுகிறான். தான் பாடிய கலம்பகத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ஒரு கணிகையோடு தங்கிமறைந்து வாழ்கிறான். ஒரு நாள் வெளியே சென்ற நம்பி வர நேரம் ஆகிறது. கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த கணிகை தூங்கி விடுகிறாள். அகாலத்தில் வீட்டுக்கு வந்த கவிஞன், தூங்குகிற தன் காதலியை எழுப்ப, கொஞ்சம் சந்தனக் குழம்பை எடுத்து அவள் மீது தெளிக்கிறான். தெளிக்கும் போது கலம்பகப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. பாடிக்கொண்டே தெளிக்கிறான்.

செந்தழலின் சாற்றைப்
பிழிந்து செழுஞ்சீதச்
சந்தன மென்றாரோ
தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி
ஆகம் தழுவாமல்
வேகின்ற பாலியேன்
மீது