பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கங்காளர், கயிலாய மலையாளர்.
கானப் பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப் படையாளர்
விடைப்பாளர் பயிலுங் கோயில்

என்று ஞானசம்பந்தர் கோயிலைப் பாடினால், கோயிலில் உள்ள மூர்த்தியை,

ஆனைக்காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர் சட்டியைக்
கானூர் முளைத்த கரும்பினை

என்று நாவுக்கரசர் பாடி மகிழ்கிறார். இந்தக் கானப் பேரூர் கட்டியாம் கடவுளே சுந்தரர் தேவாரத்தில் கானப்பேரூர் உறை காளையாகிறார். அதனால் அந்த ஊர் காளையார் கோயில் என்று வழங்கப்படுவதற்கும் காரணம் ஆகிறார். நாவலூர் நம்பியாரூரர் தலம் தலமாகச் சென்று இறைவனைப் பாடித் துதித்து வரும் நாளில், தன் அருமை நண்பர் சேரமான் பெருமாள் நாயனாரோடு திருச்சுழியல் என்னும் தலத்துக்கு வந்து சேருகிறார். அங்கு அன்றிரவு துயிலும் போது கானப்பேர் உறை அண்ணல் அவர் கனவிலே தோன்றுகிறார். காளை உருவிலே, செங்கையினிற் பொற் செண்டும், திருமுடியில் சுழியமுடன், எங்குமில்லாத் திருவேடம் என்புருகா முன்காட்டி, யாம் இருப்பது கானப்பேர் என்றும் ஞாபகப்படுத்திவிட்டு மறைகிறார். அதனால் சுந்தரர் இந்தக் கானப்பேர் ஊருக்கே வருகிறார். வரும் வழி எல்லாம்.

காதலுறத் தொழுவது என்று கொலோ?
அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை
காளையையே !

என்று ஏங்கி ஏங்கித் துதிக்கிறார். அன்று முதல் கானப்பேர் என்று வழங்கப்பட்ட தலம் காளையார் கோயில் என்று பெயர் பெறுகிறது.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதியும் பரமசிவனும் தனித்திருந்தார்கள். அப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. பார்வதியின்