பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வேங்கடம் முதல் குமரி வரை

துணையாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் திரும்பு கிறான் நம்பிராஜன். வேங்கையாக இருந்த முருகனும் திரும்ப வேடுவனாகி, வள்ளியை அடுத்து, காதல் மொழிகள் பேசுகிறான். வள்ளியின் உள்ளத்திலுமே காதல் அரும்புகிறது. திரும்பவும் நம்பிராஜன் பரிவாரம் அங்கு வருவதைக் கண்டு வள்ளி வேட்டுவனை ஓடிவிடுமாறு பணிக்கிறாள்.

முருகனும் ஓடிவிடுவது போல் பாவனை செய்து விட்டு ஒரு விருத்தனது வடிவிலே நம்பியின் முன் ஆஜராகிறான்.

தான் குமரித்துறையில் நீராடிச் செல்வதாகச் சொல்கிறான். நம்பியும் இந்த வார்த்தையை நம்பி, விருத்தனான முருகனை தன் மகள் வள்ளியின் பாதுகாப்பிலேயே தினைப்புனத்தில் இருத்திவிட்டுச் செல்கிறான். அவளும் இவனுக்கு தேனும் தினை மாவும் பிசைந்து கொடுத்து உபசரிக்கிறாள். இவனோ தன் வயதிற்கு அடுக்காத காதல் மொழிகள் பேசுகிறான்.

அவளோ இந்த விருத்தனை வெறுக்கிறாள். கடைசியில் தன் விருப்பம் எளிதில் நிறைவேறாது என்பதறிந்து தன் தமையனான அத்தி முகத்தானை நினைக்கிறான். அவனும் யானை உருவில் வந்து வள்ளியை பயமுறுத்துகிறான். அந்தப் பயத்தை நீக்கும் வகையில், விருத்தனான முருகன் வள்ளியை அணைத்துக் கொள்கிறான். தன் சுய உருவையும் காட்டுகிறான்.