பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வேங்கடம் முதல் குமரி வரை

இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சியும் விவாதமும் நமக் கென்னத்திற்கு?. நாம் பார்த்து அனுபவிக்க வேண்டியதெல்லாம் அவனும் அவனுடைய சகாக்களும் தீட்டி வைத்திருக்கும் சித்திரங்களைத் தானே. சித்திரங்கள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகவே அழியாதிருப்பது அதிசயத்திலும் அதிசயமே. மூலிகைகளிலிருந்து எடுத்த வர்ணம் என்று மட்டும் சொல்வதற்கில்லை. உலோகங்களிலிருந்தும் வர்ணத்தை வடித்தெடுத்திருப்பார்கள் போல் தோன்றுகிறது, சாதாரண வர்ணத்தில் கூட இந்தச் சித்திரங்களைத் தீட்டி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க என்னால் இயலவில்லை. ஏதோ பேனாச்சித்திரங்களைத் தந்தே உங்களைத் திருப்தி செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கும் ஒரு 'அஜந்தா' உண்டு. அதை நாமும் பார்த்து விட்டோம் என்று கொஞ்சம் திருப்தியடையலாம் அல்லவா?