பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

83

அதற்கெல்லாம் பட்டாச்சாரியார்கள் அனுமதிக்க மாட்டார்கள். கோயில் பிராகாரத்தைச்சுற்றி வரும் போது வடக்கு வாயில் சன்னல் வழியாகக் கண்டால் பாததரிசனம் கிடைக்கும். பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ என்று கொஞ்சம் கற்பனை பண்ணி அந்தக் காசினி வேந்தன் வடிவைக்கண்டு கொள்ளவேண்டியது தான், இதுவரை நாம் கண்ட மூன்று கோயில்களையும் சேர்த்தே நம்மாழ்வார் மங்களா சாஸனம் செய்து வைத்திருக்கிறார்.

புளிங்குடி கிடந்து வரகுலைமங்கை
இருந்து, வைகுந்தத் துள்நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய், எனக்கருளி
தணிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே

என்பது நம்மாழ்வார் பாசுரம்.

புளிங்குடியிலிருந்து ஐந்து மைல் கிழக்கு நோக்கிச் சென்றால் பெருங்குளம் வந்து சேருவோம். பெயருக்கு ஏற்ப ஊரை ஒட்டி வடபுறத்தில் ஒரு பெரிய குளமே இருக்கிறது. இங்குள்ள கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மாயக்கூத்தர். இவரே உத்சவர். மூலவராக இருப்பவர் வேங்கட வாணர். அவர் பிரஹஸ்பதிக்கு பிரத்யக்ஷமானவர். அவர் பக்கலிலேயே பிரஹஸ்பதியும் இருக்கிறார். இந்த மாயக்கூத்தனையும் நம்மாழ்வார் பாடி மகிழ்ந்திருக்கின்றார்.

மாடக் கொடி மதிள்
வண்குட்டால் நின்ற மாயக் கூத்தன்