பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வேங்கடம் முதல் குமரி வரை

திரும்பினால், ஒரு சிறு மண்டபம் பூட்டி வைக்கப் பட்டிருக்கும்.

அதைத் தான் கழுநீர்ப் பெருமான் சந்நிதி என்பர். மடைப் பள்ளியிலிருந்து வரும் கழுநீர் எல்லாம் அப்பக்கமாகத்தான் ஓடும். அங்கு ஒரு காவல் தெய்வம் இருந்திருக்க வேண்டும். அவனையே கழுநீர்த் துறையான் என்று அன்று மக்கள் அழைத்திருக்க வேண்டும்.

இன்று அம்மண்டபத்தில் இருப்பது ஒரு பீடம் மட்டுமே. கழுநீர்த் துறையான் கழுநீரோடு கழுநீராய் கரைந்து போய்விட்டான் போலும்! கோயில் வாயிலுக்கு வடபுறம், அவருக்குத் தனி சந்நிதி. அவரையும் வணங்கிவிட்டே கோயிலுக்குள் நுழையலாம். கொடி மடம் மகாமண்டபம் எல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வர வேணும். அங்கிருந்தே மூலவராம் வேங்கட வாணனைத் தரிசிக்கலாம். வேங்கடவாணன் அந்த திருமலை வேங்கடவனைப் போல தனியாகவே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலே வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இந்த வேங்கடவாணன் இருக்கும் கருவறையிலே வேதசாரரும், அவர் மனைவி குமுதவதையும் கூப்பிய கையராய் நிற்கிறார்கள். அத்துடன் பிரகஸ்பதியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவிக்கு அவர் இடம் கொடுக்க வில்லை. அர்த்த மண்டபத்தில் இருக்கும் உத்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இரு மருங்கிலும் அலர்மேல் மங்கைத் தாயாரும், குளந்தை வல்லித் தாயாரும் இருக்கின்றனர்.

மூவரும், இவர் பக்கலில் கருடனும், அழகிய குறட்டொன்றிலே சர்வாலங்கார பூஜிதராய் நிற்கின்றனர். வேங்கட வாணனையும் மாயக் கூத்தரையும் வணங்கித் திரும்பும்போது இத்தலத்திற்குச் சிறப்பான கருடாழ்வார் இருவரைக் காணலாம். ஒருவர் புத்தம் புதிய மேனியர். மற்றொருவர் புராதனமானவர்.