பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

வேண்டும் விடுதலை

ஒப்போலை இட்டனர். தனித்தமிழ்நாடுதான் தேவை என்று உறுதியான கொள்கையைத் தேர்ந்தனர்.

அடடா! எத்துணை ஆர்வம் அவர்கள் முகத்தில் குமிழிட்டது! எத்துணை வீரம் அவர்கள் பேச்சில் கொப்பளித்தது! எத்துணை உறுதி அவர்கள் குரலில் கனன்று நின்றது! காட்சி! காட்சி! கண்கொள்ளாக் காட்சி!

இறுதியாக, இரண்டாம் நாள் முடிவில், ஒப்போலைக் கருத்தெடுப்பு மிக மிக அமைதியாக, மிக மிக நேர்மையாகப் பொறுப்புணர்வுடன் நடைபெற்றது. அதன் முடிவோ அனைவரும் வியக்கும்படி அமைந்திருந்தது. வியப்பு! வியப்பு! வாய்மேல் விரல் வைக்கும் வழிந்தோடும் வியப்பு!

முடிவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பெற்றது. தேர்தலில் கலந்துகொண்டவர்கள் : 241. இவர்களுள் இந்தியத் தேசியத்திற்காக ஒப்போலையிட்டவர் ஏழு பேர்; மாநிலத் தன்னாட்சியை விரும்பி ஒப்போலை இட்டவர் இருபத்து மூவர்! தனித்தமிழ்நாட்டுக் கொள்கையே, எதிர்காலத் தமிழின முன்னேற்றத்திற்கு ஏற்றந் தருவது என்று உறுதியாகவும் இறுதியாகவும் ஒப்பம் அளித்தவர், இருநூற்று எட்டு பேர்! இது மொத்தத்தில் 87 விழுக்காடு!

இந்தியத் தேசியத்தை விரும்பும் 2.7 விழுக்காடு எங்கே! மாநிலத் தன்னாட்சியை விழையும் 9.6 விழுக்காடு எங்கே ! தனித்தமிழ்நாட்டை வேட்கும் 87 விழுக்காடு எங்கே!

எத்துணைப் பொருத்தமான தீர்ப்பு!

தமிழக மக்கள் அனைவருமே வந்து கொடுத்த தீர்ப்போலையாக அம்முடிவு பெரும் வெற்றி முழக்கத்துடன், பெரியார் அரங்கமே எதிரொலிக்குமாறு உரக்க வாழ்த்தி வரவேற்கப் பெற்றது. அதைக் கேட்ட அனைவரும் தமிழகமே தனியாட்சி எய்தியது போன்று பூரிப்பெய்தினர், அங்கு வந்திருந்தோர்! தமிழகத்திலுள்ள - அங்கு வர வாய்ப்புக் கிடைக்காத தமிழரும் - பிற வெளிநாட்டுத் தமிழரும் அவ்வெற்றி முழக்கத்துடன் தங்கள் வாழ்த்தொலியையும் கலந்து ஒலிப்பார்களாக!

வெல்க தமிழின முன்னேற்றக் கழக முயற்சிகள்!

வாழ்க தனித்தமிழகப் போராட்டம்!

விரைந்து சமைப்போம் தனித்தமிழ்நாடு!

— தமிழ்நிலம், இதழ் எண். 78, சனவரி 1987