பக்கம்:வேமனர்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பால் கழிவிரக்கத்தை வளர்த்துக்கொள்கின்றாள். அவருடைய மூர்க்கத்தன்மையைக் குறைக்கவும் அவரை நாகரிகப்படுத்தவும் முயல்கின்றாள். செல்வந்தரல்லாத ஒரே ஓர் இளைஞனிடம் அதிகமாகச் சிக்கிக்கொண்டமை பரத்தையின் அன்னையைத் தொந்தரவடையச் செய்கின்றது. தாம் பெறும் மகிழ்ச்சிக்காக கட்டணங்கள் செலுத்தினர் என்பதற்கு ஐயமில்லை; ஆனால் அவர் செலுத்திய கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறையில் இல்லை; நிறைவுடையனவாகவும் இல்லை. முற்றிலும் செலுத்தத் தவறும் ஒரு காலமும் வந்து சேர்கின்றது. உடனே தாய்க்கிழவி (பரத்தையின் தாய்) அவருடைய வருகைகட்குத் தடை உத்தரவு போடுகின்றாள். வேமனர் பதுங்கிச்செல்ல முயல்கின்றார். ஆனால் கூரிய பார்வையுடைய அந்தக் கிழப்பூனை அவரைத் துரத்தி அடிக்கின்றது. வேமனர் மனம் உடைந்து சோர்வுறுகின்றார். அருவருப்புத் தோற்றமுடைய அந்தக் கிழவியைக் கொன்று தீர்த்துவிட வேண்டுமென்றும் சிந்திக்கின்றார் வேமனர். இந்நிலையில் அந்த இளம் பரத்தை வேறோரு கள்ளக்காதலனுடன் தொடர்புகொண்டு விடுகின்றாள். வேமனரின் ஏமாற்றமும் வெறுப்பும் ஒருவகையில் முழுமை எய்திவிடுகின்றன.

திருந்திய மனநிலையில் தன் மைந்தனைக் காணும் வேமனரின் தந்தையார் அவரை மணவாழ்க்கையில் கட்டாயப்படுத்தி நுழைத்துவிடுகின்றார். இல்லற வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் நாட்டுப்புற வாழ்க்கைச் சித்திரமாக அமைகின்றன. ஒரு குழந்தை பிறக்கின்றது; மீண்டும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகின்றார் வேமனர். மகிழ்ச்சியான மனநிறைவுடன் கூடிய வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்கின்றார் கவிஞர். ஆனால் முரட்டுத்தனமான அந்தக் கனவினின்றும் எழுப்பப்பெறுகின்றார். வேமனருடைய துணைவிக்கும் அவருடைய சிற்றன்னைக்கும் இடையே இடைவிடாத குடும்பச் சச்சரவுகள் தோன்றுகின்றன. ஒரு நாளாவது-ஏன்? ஒரு மணிநேரம்கூட, ஏதாவது அருவருப்பான காட்சியின்றிக் கழிவதில்லை. கூட்டுக் குடும்பவாழ்க்கை இனி இயலாதெனக் கருதிய வேமனர் தனிக்குடித்தனத்தைத் தொடங்குகின்றார், அந்த ஏற்பாட்டிலும் தொந்தரவுகட்கு ஒரு முடிவு ஏற்படவில்லை; அவை பெருகத்தான் செய்கின்றன. தம்முடைய துணைவி சோம்பியிருப்பவளாகவும் பொருள்களை வீணடிப்பவளாகவும் இருந்து குடும்பப் பொறுப்பைக் கண்காணிக்கும் திறமையின்றி இருப்பதைக் காண்கின்றார். மட்டின்றி உணவினை விரும்பும் அவருடைய சுவைக்கேற்றவாறு அவளுடைய சமையல் வெறுக்கத்தக்கதாக உள்ளது. உணவு படைப்பதும் வெறுக்கத்தக்கதாக அமைகின்றது. எப்பொழுதுமே அவள் அவரை வைது தொந்தரவு செய்கின்றாள்; அவரைத் தொந்தரவு செய்யும் நிமித்தம் குழந்

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/49&oldid=1244258" இலிருந்து மீள்விக்கப்பட்டது