பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 109

வழியாக நடந்து ஒரு கால் மட்டுமே வைக்கும் படியான ஒரப் பலகையில் நடந்து தாவும் பெரியாள்களையும் சித்தாள் பெண்களையும் பார்த்து பூமாதேவியே, பத்திரமாய் நடங்கள் என் பிள்ளைகளே! நீங்கள் இடறி விழுந்தால் என்னால் தாங்க முடியாது. நான் தாங்கினாலும் என்னோடயே நீங்க தங்க வேண்டியதாயிடும் என்று கார்பென்டரின் உளியோசை மூலமும், கல்லுடைக்கும் சுத்தி ஓசை மூலமும் எச்சரிப்பது போலிருந்தது. முன்பு இடறி விழுந்து, மனிதச் சதையில் இருந்து மண் சதைகளாகப் போன தன் பிள்ளைகளுக்காக ஆயில் எஞ்சின் ஒலியில், பூமாதேவி ஒப்பாரி வைப்பது போலவும், ரப்பர் குழாயில் பீறிடும் நீர் மூலம் அவள் கண்ணிர் விடுவது போலவும் தோன்றியது.

அந்த அடிமை எறும்புகள் சாரிசாரியாக சாரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். மண்பட்ட மேனியில் எலும்புகள், பீம்கள் மாதிரியும், கால்கள் காலம்கள் மாதிரியும் தோன்றின. இந்த அடித்தளப் பெண்களின் மேக்கப்பிற்குக் குறைச்சலில்லை. சுண்ணாம்பு பவுடர் முகம், பாண்டுவில் இருந்து ஒழுகிய கான்கிரீட் கலவையை டிசைன்களாகக் காட்டிய புடவை, சுடு மண்ணில் நடந்து நடந்து ஏற்பட்ட கன்னங்கரிய காய்ப்புகளை செருப்புகளாகக் காட்டிய கால்கள்.

தாயம்மா, தன் சக்தியையும் மீறி, சல்லடையில் மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்தாள். அன்னவடிவு, அதை சல்லடை முழுவதும் கைகளால் பரப்பிக் கொண்டிருந்தாள். பிறகு, தாயம்மா ஏதோ சொல்ல, அன்னவடிவு மண்கொட்ட தாயம்மா அதைப் பரப்பிக் கொண்டிருந்தாள். சிறிது தொலைவில் வாணம் வெட்டும் தன் கணவனையே பரிதாபமாகப் பார்த்த அன்னவடிவு, அவன் உடம்பில் வழிந்த வேர்வையைத் துடைக்கப் போகிறவள் போல், துடித்தாள். மெதுவாக வெட்டுங்க. நமக்கு இந்த உடம்புதான் மொதலு என்று அங்கிருந்தபடியே கூறப்போனாள். அதற்குள் தாயம்மா அவளிடம் சொல்லிவிட்டு, ஒரு ஒரமாய்ப் போனாள். அவள் போனதும் அன்னவடிவு மண்ணைக் கொட்டி, அதை தன் கையாலேயே பரப்பினாள். கணவனைப் பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பாதவள் போல், தாயம்மாவுக்கும் சேர்த்துப் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.

கால்மணி நேரம் ஆகியிருக்கலாம். அலுவலக ஷெட்டில் கான்டிராக்டருக்கு ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த, சூப்பர்வைசர் ஒருவர், மண்ணில் இருந்து கிளம்பிய பூதம் போல அன்னவடிவின் முன்னால் தோன்றி அவளை அதட்டினார்.

"தாயம்மா எங்கே?"