பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 113

ஆவேசம் வந்தது. அந்தச் சமயத்தில் மேஸ்திரி, அவள் காதில் முணுமுணுத்தார்.

"தப்பா நினைக்காதேம்மா. நானு புள்ள குட்டிக்காரன். சும்மா மேலுக்கு அதட்டினாலும் ஒன்மேலே எனக்குக் கோபமில்லே. ஆனால் காண்டிராக்டர், சூப்பர்வைசரை விட்டுக் கொடுக்கல. நீ சூப்பர்வைசர சொன்னது, காண்டிராக்டரை சொன்னது மாதிரியாம். அதனால நான் இருக்கணும்னா நீ இருக்கப்படதாம். வேணுமின்னா போய் பேசிப் பாரு."

"சரி. அந்த தர்ம மவராசன் கிட்டயே நான் பேசிக்கிறேன்."

தாயம்மா அலுவலக ஷெட்டுக்குள் இருந்த குட்டியறைக்குள் தலைவிரிகோலமாக ஓடினாள்.

வெள்ளை முடியை டையால் கறுப்பாக்கி, விகார முகத்தை சிரிப்பாக்கி, சுண்ணாம்புப் பூச்சு பூசுபவர் போல் தோன்றிய ஐம்பது வயது மதிக்கத்தக்க காண்டிராக்டர், நான்கைந்து சகாக்களுடன், விஸ்கி வகையறாக்களுடன் சிக்கன் பிரியாணி வகையறாக்களையும் சிக்கனமாக அல்ல, சிக்கெனப் பிடித்தபடி வாயில் பிடித்துக் கொண்டிருந்தார்.

தாயம்மாவைப் பார்த்தவர்- தம் தலைக்குள் ரம் பாய்ந்தது போல் துள்ளினார்.

"ஏய், யாரு நீ? ஒன்னை யாரு உள்ளே விட்டது? டேய் சுந்தரம், சுந்தரத்த எங்கேடா?"

தாயம்மா, பயபக்தியோடு பேசினாள். 'தப்பா நெனைக்கப்படாது நயினா. இந்த சூப்பர்வைசர் பையன் ஏடா கோடமாய் பேசுனான். நானும் பேசிட்டேன். அதுக்காக என்னை வேலையில் இருந்து இஸ்டாப் பண்றேன்னு மேஸ்திரி சொன்னார். நானு, இந்த ரூபாய்லதான் அரிசி வாங்கணும். டாக்டரண்டே போகணும்: அதனாலதான் அய்யாகிட்டே."

அய்யா விஸ்கி மயக்கத்தில் கத்தினார். "ஒன்னே யாருடி உள்ளே விட்டது? பன்னாட மாதுரி வந்து குதிக்கிறே. ஏய் மேஸ்திரி, அவன், மேஸ்திரியைக் கூப்பிடு."

அவருடன் குடித்துக்கொண்டிருந்த ஒருவர். தள்ளாடியபடியே எழுந்து, வெளியே போய், மேஸ்திரியைத் தள்ளியபடியே உள்ளே கொண்டுவந்தார். காண்டிராக்டர் கொடுத்த தண்ணிக்கு வட்டி கட்ட வேண்டாமா? அந்த மேஸ்திரியிடம் ரோஷத்தைக் காட்டாவிட்டால், யாரிடம் காட்டுவார்? காட்டினார்.