பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஒருநாள் போதுமா?

யாரோ அன்னம் அன்னம் என்று கத்துவது கேட்டு, பாண்டுக் கூடையுடன் இரண்டாவது மாடியில் நின்ற அன்னவடிவு திரும்பிப் பார்த்தாள். சுற்றி நின்ற கூட்டத்திற்கு மத்தியில் நிலைகுலைந்து நின்றவனை நான்குபேர் தூக்குவது தெரிந்தது. அனிச்சையாகக் குதிக்கப் போனவளை ஒரு கொத்தனாரும், சித்தாள் பெண்களும் அசைக்க முடியாதபடி பிடித்துக் கொண்டார்கள். அவளைக் கைத்தாங்கலாகக் கீழே கொண்டு வந்தார்கள். அன்னவடிவு கத்திக்கொண்டே திமிறினாள்.

"என் சாமி என் ராசா என் தெய்வமே ஒமக்கு என்ன ஆச்சு, ராசா?

அன்னவடிவு தளத்திற்கு வந்ததும் அவளை விட்டார்கள். அவள் தலையில் அடித்தபடி முகத்தில் அறைந்தபடி ஓடினாள்.

வேலு, தார்ப்பாயில் கிடத்தப்பட்டிருந்தான். யாரோ ஒருவர் விசிறியால் வீசிக்கொண்டிருந்தார். அன்னவடிவைப் பார்த்ததும் அவன் கண்களில் நீர் பெருகியது. பேசுவதற்காக வாயைத் திறந்தான் நுரைதான் வந்தது. அவள் முகத்தைப் பார்த்தபடி தன் மார்பைப் பிடித்தான். முதுகை வளைத்தான். கைகால்கள் வெட்டின. வாய் கோணியது. கண்கள் அவளை நோக்கியே நிலைகுத்தி நின்றன.

அன்னவடிவு அவனைத் தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்டாள். அவன் கேட்டுக் கொடுக்காத முத்தங்களை, அவன் வாயிலும் முகத்திலும் மாறி மாறிக் கொடுத்தபடி "என் ராசா, நீ முழிக்கத்ப் பாத்தா பயமா இருக்கே நீரு துடிக்கதப் பார்த்தால் எப்படியோ இருக்கே என்னைவிட்டுப் போயிடாதே ராசா என் ராசா. என் தெய்வமே என்னை மடியில வச்சு கொஞ்சி விளையாடுன மவராசா நாம் இதுக்காகவா மெட்ராஸ் வந்தோம்? ஒன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா நான் பாவி பிறந்தேன். பேசு ராசா. ஒன் செல்லக் கிளிகிட்ட ஒரு வார்த்தை பேசு ராசா. நீ ஒருத்தியே போதும். எனக்கு சொத்தும் சுகமும் வேண்டாமு ன்னு சொன்ன என் துரையே. என்னை விட்டுட்டுப் போயிடாதே. போறதாய் இருந்தால் என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிடு. போயிடு." -

வேலு, தனியாகப் போக விரும்புகிறவன் போல் அவளைப் பார்த்தான். பிறகு அவளை விட்டு அகல விரும்பாதவன் போல் தன் கையை அங்குலம் அங்குலமாகச் சிரமப்பட்டுத் தூக்கி அவள் கையோடு இணைத்தான். அன்னவடிவு கூப்பாடு போட்டாள். சித்தாள் பெண்கள் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கத்தினார்கள்.

இதற்குள் டாக்ஸி வந்தது. வேலு பின் இருக்கையில் கிடத்தப் பட்டான். அவன் தலையை மடியில் வைத்தபடி அன்னவடிவு விக்கித்து உட்கார்ந்திருந்தாள். அவளோடு, இன்னொரு சித்தாள் பெண்ணும்.