பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 15

அலுவலகத்திற்கு அலுவலகங்கள் அனுப்பும் இன்டென்ட்களை செப்பனிட்டு, குறிப்பிட்ட சமயத்திற்குள் அவற்றைத் தருவித்துக் கொடுக்க வேண்டும். இல்லையானால் அலுவலகங்களில் டைப் அடிக்க முடியாது. அடித்தவற்றை பைலில் அடக்க முடியாது. அடக்கியவற்றை டேக்கால் கட்டமுடியாது. பேப்பர் வெயிட்டுகள் இல்லாமல், காகிதங்கள், பறக்கும். குண்டுசிகள் இல்லாமல், பக்கங்கள் வெட்கங்களாகும். ஆக மொத்தத்தில் அது நூற்றில் ஒரு அலுவலகம் அல்ல. நூறு அலுவலகங்களுக்கும், இத்தகைய பொருட்களை லட்சக் கணக்கான ரூபாயில் வாங்கிக் கொடுக்கும் ஒரே ஒரு அலுவலகம் காண்டிராக்டர்கள் கண் வைக்கும் அலுவலகம்.

சரியான சமயத்திற்கு வரும் சரவணன், முக்கால் மணி நேரம் கடந்தும் வராததால், சீனியர் ஸ்டெனோகிராபர் - உமா, தனது அறையை விட்டு வெளியே வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும், பலர் வலியப் போய் குசலம் விசாரித்தார்கள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாள் என்பதற்காக அல்ல. அழகுதான். அடர்த்தியான முடிதான். கிறக்கமான கண்கள்தான். களையான முகம்தான். வாளிப்பான உடம்புதான். சிவப்புதான். இன்னும் கல்யாணம் ஆகவில்லைதான். அது, இன்னும் காலம் கடக்காததுதான். ஆனால், அதற்காக அவளிடம் வலியப் பேசவில்லை.

பல அந்தரங்க கோப்புகளின் அதிநுட்பமான விவரங்கள் அவளை மீறிப் போக முடியாது. எல்லோருடைய குடுமியோ, கிராப்போ, கொண்டையோ, அத்தனையும் அவள் கையில். அவள் பேசுகின்ற பேச்சு ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. பம்பாய் நல்ல நகரந்தானே. என்று ஒருத்தரிடம் கேட்டால், அவன் அந்த நகரத்திற்குப் போகப் போகிறான் என்று அர்த்தம். பேசு. பேசு. எத்தனை நாளைக்குப் பேசுவே என்றால், அவனுக்கு ஓலை ரெடியாவதாய் பொருள். அவருக்கென்ன குறைச்சல் என்றால் ஆசாமிக்கு பதவியுர்வு வரப்போவதாகக் கொள்ளலாம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள், அவள் வாயைக் கிளறப் பார்த்தார்கள். அந்த மாதிரி சமயத்தில் அவள், பேசியவரை விட்டு விட்டு, பேசாதவரைப் பார்ப்பாள்.

திடீரென்று அந்த அலுவலகத்தில் அரைகுறைப் பேச்சுக்கள் கூட அடங்கின. லாவகமாய் உடலாட்டி, நளினமாய் உலா வந்த உமா, உள்ளே ஓடிவிட்டாள். டெஸ்பாட்ச் அன்னம், நிமிர்ந்து உட்கார்ந்தாள். சரவணன், ஒரு பறவை பார்வையோடு. அவசர அவசரமாய், தனது அறைக்குள் போகப் போனான். பிறகு, எதையோ யோசித்தவனாய், அவன் பின்பக்கமாய் நடந்து, அக்கெளண்டன்ட் ராமச்சந்திரனிடம். ஓங்க