பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வேரில் பழுத்த பலா

அப்புறம் லஞ்சக் குற்றச்சாட்டு, "என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். ஆனால் அதிலே நான்தான் எழுதுவேன். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இளமையிலேயே தந்தையை இழந்தேன். அண்ணனின் நேர்மை அப்போதே எனக்குத் தாலாட்டுப் பாடியது. கிணறு வெட்டியிருக்கிறேன். ஆனால் உழைக்கும் அலுவலகத்திற்குக் குழி வெட்டியது கிடையாது. மரத்தில் ஏறியிருக்கிறேன். அதிகார மரத்தில் ஏறியதில்லை. பள்ளிக்கூடக் காலத்தில் வேலைக்கும் கூலிக்கும் கை நீட்டி இருக்கிறேன். ஆனால், இதுவரை யாரிடமும், சட்ட விரோதமாய் சமூக விரோதமாய் கைநீட்டியதில்லை. என் வீட்டைச் சோதனையிடலாம். சி.பி.ஐ. மூலம், என் மீதுள்ள குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும். கண்டிப்பாய், தயவு செய்து நான் காசு வாங்கினேன் என்று எந்தக் கை சுட்டிக் காட்டப்படுகிறதோ.. அதனால் இப்போது என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை."

அன்னத்தின் கண்கள் கலங்கின. நேற்று, அவன் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது.

சரவணன் தொடர்ந்தான். அந்த அலுவலகம், மத்திய அரசின் பாதுகாப்பு விதிகளின்கீழ் வருவதைச் சுட்டிக் காட்டி, அலுவலக ரகசியங்கள் காண்டிராக்டருக்கு எப்படிப் போய் சேர்ந்தது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், இல்லையானால், லட்சக்கணக்கான பொருட்களைத் தருவித்து, சேமிக்கும் அலுவலகம், பெருச்சாளிக் கிடங்காய் மாறிவிடும் என்றும் சொன்னான். அலுவலகத் தகவல்களை, காசுக்கு விற்பவர்கள் சமூக விரோதிகள் என்றும், விசாரணைக்கு உத்திரவிட்டால், தன்னால் சிலரைப் பற்றி தகவல்கள் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டான். மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தாமதித்தால், தான் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரித்தான். இறுதியில், இப்போது வெளியே தெரியாமல் இருக்கும் இத்தகைய கேள்விக் குறிகளை, இப்போதே கண்டு பிடிக்கவில்லையானால், அலுவலகம் காணதாகிவிடும் என்றும் சொல்லி முடித்தான். ரகசியங்களைத் திருடிய காண்டிராக்டர் செளமி நாராயணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அன்னத்தைக் குறிப்பெடுக்க வைத்தான்.

அவன் ஆவேசம், அவளையும் பிடித்துக் கொண்டது. பல்லைக் கடித்தபடி குறிப்பெடுத்தாள். இந்த ஆபீஸ்ல இவ்வளவு வேலை நடக்குதா? இவருக்கும் தெரியுமா? இப்படிப் பட்டவங்களை வைத்து, எப்படி இவர் ஆபீஸ் நடத்துறது? எப்படிப்பட்ட பழி வந்திருக்கு? பழிகாரப் பயல்கள். பொறுத்துப் பாருங்கோடா. பாருங்கடி.