64 வேரில் பழுத்த பலா
"ஊர்ல. இருந்து புறப்படுறதுக்கே யோசிச்சேன். இப்டில்லாம் வருமுன்னு எனக்குத் தெரியும். அப்பாவிப் பொண்ண இப்படியாடா மிரட்டுறது? அவளோட அப்பா இருந்தால், இப்படி மிரட்டுவியா? நான் கைகால் கதியாய் இருந்தால், இப்படி மிரட்டுவியா? அடிக்கடி மயினியும், கொழுந்தனும் காதைக் கடிச்சபோதே எனக்குத் தெரியும். ஏய். வசந்தா எழுந்திருடி. நாம ஊரைப் பார்த்துப் போவோம். இவள். நம்ம ரெண்டுபேரையும் இருக்க விட மாட்டாள்."
தங்கம்மா, சமயலறைக்குள் போய்விட்டாள். அங்கே, அவள் கேவுவது, சரவணனுக்கு லேசாய் கேட்டது. அவன், வசந்தாவிடம் வந்தான். காலால், அவளை லேசாய் உதறினான். பிறகு, அமைதியாய் கேட்டான்.
"உம். எழுந்திரு ஒங்கம்மாவை. ஆமா. ஒனக்குத்தான் அம்மா, ஒன் குடியையும் கெடுத்த அம்மா. எங்கம்மா... அதோ, சமையலறைக்குள்ளே அழுதுட்டு இருக்காள். ஒங்க அம்மாவையும் கூட்டிட்டுப் புறப்படு. நான். அவன் காலுல விழுந்தாவது, ஒன்னை ஏத்துக்கச் சொல்றேன்."
திடீரென்று வசந்தா, அண்ணனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அவன் குதிகால்களை, கைகளால் பிடித்தபடி, "தெரியாம அண்ணா. தெரியாம அண்ணா" என்று முனங்கினாள். அவன் அதட்டினான்.
"என்னது தெரியாம? உம். சொல்லு. அவனோட தனியா எங்கேயாவது போனியா?"
"சத்தியமாய் இல்லண்ணா."
"அவன் பேரு தெரியுமா?"
"தெரியாதுண்ணா."
"எங்கே வேலை பார்க்கிறான்னு."
"தெரியாது."
"அவன், ஒரு அசல் பொறுக்கி, பல பெண்களோட சுத்துறவன், ஒனக்குத் தெரியுமா?"
"தெரியாது. இன்னைக்குத்தான்."
"துவக்க விழவா?"
வசந்தா, அவன் கால்களை விடவில்லை.
"காதல்னா... ஒனக்கு என்னென்னு தெரியுமா? கண்டதும்