பக்கம்:வைணமும் தமிழும்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நூல் வைணவ சமயத்தைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் வைணவத்தைச் சாராத பிறருக்கும் பயன்படக் கூடியது. வைணவத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கட்கும் பெரிதும் பயன்படக்கூடியது. இதனையொட்டி 'சைவமும் தமிழும்' என்ற ஒரு நூலை பிற சமயத்தினருக்கு அறிமுகம் செய்யும் பாங்கில் எழுத எண்ணம் உண்டு. செம்மேனி எம்மான் சிவபெருமான் அருள் இருப்பின் கழகமே அதனையும் வெளியிட்டுப் பெருமை கொள்ளும் என்பது என் அதிராத நம்பிக்கை.

இந்த நூலை வரைவதற்கு என்னுள்ளே நிலையாக உறையும் ‘அகலகில்லேன் இறையும்' என்று அலர்மேல் மங்கை உறைமார்பனின் தோன்றாத்துணையால்தான் என்று கருதி அவன் திருவடிகளை நினைந்து வழுத்தி, வணங்கி அமைகின்றேன்.

நான் உன்னை அன்றிஇலேன்
கண்டாய்; நாரணனே!
நீஎனை அன்றி
இலை.
மெய்ப்பொருள்தான் வேத
முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா
யணன்.[1]
- திருமழிசையாழ்வார்

இங்கனம் அடியேன்

ந.சுப்புரெட்டியார்.

(இராமாநுசதாசன்)

வேங்கடம்

AD-13, அண்ணாநகர்

சென்னை-600040.


  1. 'நான் முகன் திருவந்தாதி - 1,12
xiv