பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வ.வே.சு.ஐயர்


ஒரு நாள் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு கீர்த்திகர் வழக்கம் போல சுற்றச்சென்றுவிட்டார். அவர் மீண்டும் விடுதிக்குத் திரும்பிட நேரமாகும் என்பதால் ஐயரும், மற்றவர்களும் கீர்த்திகருடைய அறையை வேறொரு திறவுகோல் கொண்டு திறந்தார்கள். உள்ளே இருந்த எல்லாச் சமான்களையும் சோதனை செய்தார்கள்.

கீர்த்திகர் லண்டன் போலீசாருக்கு அனுப்புவதற்காக எழுதிய கடிதங்கள் அவர்களிடம் கிடைத்தன. இதன் மூலமாக, அவர் லண்டன் போலீசாருக்கு ஒர் ஆள் காட்டியாக வேலை செய்கிறார் என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு மோசமான ஒரு விபீஷணனா வரட்டும் அந்தச் சகுனி, உடனிருந்தே கொல்லும் அவனது துரோகத்தைத் தட்டிக் கேட்டு விரட்டியடிப்போம் என்று ஐயர், கீர்த்திகருடைய அறையைப் பூட்டிவிட்டார். தனது அறைக்குச் சென்று துப்பாக்கியை எடுத்தார். அதிலே சில ரவைகளைப் போட்டுத்திணித்துக்கொண்டு, கீர்த்திகர் எப்போது வருவார் என்று எதிர்நோக்கி இருந்தார்.

வழக்கம் போல கீர்த்திகர் அன்றிரவு நெடுநேரம் சென்று அறைக்கு வந்தார். உள்ளே போனார். அவர் பின்னாலேயே ஐயரும் சென்றார். ஐயரைப் பார்த்ததும் கீர்த்திகர் திடுக்கிட்டார். ‘லண்டன் நகருக்கு வந்து நண்பனைப் போலப் பழகிக் கொண்டு வெள்ளையர்களுக்கு உளவு வேலை செய்வது துரோகம், சகுனித்தனம், கேவலம் என்று ஐயர் கோபமாகக் கொந்தளித்தார்.

கடுமையான சொற்களைக் கொட்டும் ஐயரது கோபத்தைப் பார்த்துக் கீர்த்திகர் பயந்தார். ஒருவாறு சமாளித்துக் கொண்ட கீர்த்திகர், உளவுவேலை செய்வது அயோக்கியத்தனம், பச்சைத் துரோகம் என்று ஐயர் கோபத்துக்குப் பின்பாட்டுப் பாடினார்.

நாணயமானவர் போலப் பேசும் கீர்த்திகரது யோக்யதையைப் பார்த்து ஐயர் மேலும் கோபம் கொண்டு, திடீரென்று அறைக் கதவை ஓசை யேற்படும்படி அடைத்துத் தாழ் போட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/50&oldid=1082815" இலிருந்து மீள்விக்கப்பட்டது