பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என். வி. கலைமணி

7


அப்போது, வ.வே.சு. ஐயர் இந்த வீட்டுக்கு இழவு விசாரிப்பதற்காக வந்திருப்பதாக ஒற்றர்கள் மூலமாகச் செய்தியறிந்த பிரிட்டிஷ் போலீசார் அந்த வீட்டைத் திடீரென்று சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். இதைப் பார்த்த கிராம மக்கள் நம்ம ஊருக்கு வெள்ளைக்காரப் போலீசா? என்று திகைத்து விட்டார்கள்.

பிணம் உள்ள வீட்டுக்குள் போலீசார் சென்று விசாரித்தார்கள். மாரடைப்பால் சின்னக் கவுண்டர் தம்பி மாண்டுபோனார் என்பதைத் தெரிந்ததும் போலீசார், சாவு வீட்டிலே கலவரம் ஏற்படக் கூடாது என்ற பெருந்தன்மையோடு, அவரவர் பூட்ஸ்கள், தொப்பிகளைக் கழற்றிவிட்டு அந்த இடத்திலேயே மண்டியிட்டு ஜபம் செய்து விட்டு, வீதிக்கு வந்து, வீட்டுக்கு வருவோர் போவோரை அடையாளம் பார்த்து உற்று நோக்கிக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களுக்கு வ.வே.சு. ஐயரை அடையாளம் தெரியாது. அதனால், ஐயர் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்குச் செய்து கொண்டே விண்ணப்ப மனுவில் லண்டனில் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போட்டோவைப் பெரிய அளவிலே எடுத்து, ஆளுக்கு ஒன்றாக அவர்களது கைகளிலே வைத்திருந்து, ஒவ்வொரு ஆள் முகத்தையும் உற்றுநோக்கியபடியே இருந்தார்கள். எப்படியும் சாவு வீட்டுக்குள்ளே போனவர் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்று சாவு வீட்டுத் தெரு வாசலிலும், திண்ணையிலும் அவர்கள் உட்கார்ந்து விட்டார்கள்.

இதற்கிடையே தாரை, தப்பட்டைகள் சங்கோசை, சேமகண்ட ஒலிகளும் எழுந்தன. கிராமத்து மக்களிலே சிலர் போதையோடு மரணக் கூத்தாட்டத்தை ஆடிக் கொண்டே இருந்தார்கள்.

பிரேதம் தூக்கி வரப்பட்டு வீதியிலே இருந்த பாடையிலே வைக்கப்பட்டது. பிணத்தின் நெற்றியிலே திருநீற்றுப் பட்டையும், பெரிய சந்தனப் பொட்டும் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளிச் சட்டிக்காரன் பிணத்தின் முன்னாலே நின்று கொண்டு அழுதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/9&oldid=1080207" இலிருந்து மீள்விக்கப்பட்டது