பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

 

தொல்காப்பியம்

இளம் பூரணம்

 

சிறப்புப்பாயிரம்

 

வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்
தறங்கரை நாவி னான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்.கரிறபத் தெரிந்து
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.


எந்நூல் உரைப்பினும் அதற்குப் பாயிரம் உரைத்து உரைக்கவென்பது மரபு. என்னை? “ஆயிர முகத்தா னகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவ லன்றே" என்ப வாகலின், பாயிரமென்பது புறவுரை. அது நூற்குப் புற வுரையேல் அது கேட்டு என்னை பயனெனின், கற்று வல்ல கணவற்குக் கற்புடையாள்போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின்மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும், பாயிரம்கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங்கேட்டல் பயனுடைத் தாயிற்று. அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொதுவெனப்பட்டது. “ஈவோன் றன்மை” முதலிய நூலுட்சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, நூலகத்தெல்லாம் பயத்தன் மாத்திரையேயன்றி அந் நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தலின், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல நூற்குச் சிறத்தலாற் சிறப்பெனப்பட்டது.