பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii

 

ளும் நுழைந்து அங்குள்ள விக்ரகத்தை ஆராதிக்கும் பிறப்புரிமை உடையவனாகவே இருக்கிறான். பிரத்தியேகமாகவும், தனிமையான முறையிலும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட ஜாதிக்கோ கட்டப்பட்டுள்ள கோவில்களைப் பற்றிப் பேச்சே கிடையாது. அவைகளில் நுழைவு உரிமை அவற்றை ஏற்படுத்தியவர்களது இஷ்டத்தையும் விதியையும் பொறுத்ததாகும். ஆனால் பொதுவாக இந்துக்களுக்கென்று ஏற்படுத்தப்பட்ட கோவில்களில் இந்து எனக் கூடியவன் ஒவ்வொருவனும் பிறருக்கு இடர் விளைக்காத முறையில் எங்கு வேண்டினும் செல்லலாம். இதுதான் உண்மையான சட்டம். ஆனால் பொதுக்கோவில்களில் தீண்டப்படாதவர்களுக்கு நுழைவு உரிமை அளிக்கும் விஷயத்தில் பொதுவாக நீதிஸ்தலங்களிலும் மற்ற இடங்களிலும் எழும் கூக்குரல் என்ன வெனில் “பண்டைக்கால வழக்கம்” (Immemorial usage) என்பதாகும். மற்றொன்று ஏற்படுத்தியவர்களது கருத்து (Intention of the Donor) என்பதாகும். ஆனால் உண்மையில் நம் தமிழ் நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை ஏற்படுத்தியவர்கள் யார் என்றும், அவர்களது எண்ணம் என்ன என்றும், ஒருவருக்கும் தெரியவே தெரியாது. அப்படியிருக்கும் போது பண்டைக்கால வழக்கம் என்று கூக்குரல் இடுவது தவறு.

ஆதிகாலத்திலிருந்து இந்துக் கோவில்கள் அரசர்களால் பொது ஜனங்களுடைய பணத்திலிருந்தும், அந்தப் பணத்தைப் பெருக்குவதற்குமே கட்டப்பட்டன. சந்திரகுப்த மௌரியன் என்னும் வட நாட்டுச் சக்கிரவர்த்தியின் பிரதம மந்திரியாகிய சாணக்கியன் என்பவரது “அர்த்த சாஸ்திரம்” என்னும் நூலில் மக்களுடைய மடமையையும் மூட நம்பிக்கையையும் உபயோகப்படுத்தி பேய் பிசாசுகள் தெய்வங்கள் இருப்பதாகப் பாவனை செய்து பல இடங்களில் கோவில்களைக் கட்டி அங்கு வரும் கோடிக்கணக்கான மக்கள் அளிக்கும் காணிக்கைகளைத் தான் கைப்பற்றி அரசியல் விஷயங்களுக்குச் செலவழிக்கும் கடமையைப்பற்றியும், முறைமையைப்பற்றியும் வெகு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக்கோவில்களெல்லாம் அர