பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

செப்ப லென்றது பின்னுங் கூட்டப்பட்டது. புலமையாவது பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே கொண்ட பேரறி வுடைமையாம். உயர் வொப்பற்ற இவரது புலமையைக் குறித்து நோக்குங்கால் ஏனையோர் புலமை புலமையன்றாய் முடிதலின், இவ்வாறு கூறினார். புலவ ரென்பது நாயனார்க்கே காரணப் பெயரா மென்றபடி. (௩௰௪)

மதுரையறுவை வாணிகர் இளவேட்டனார்.

இன்பமும் துன்பமு மென்னு மிவையிரண்டு
மன்பதைக் கெல்லா மனமகிழ-வன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

இ-ள். இன்பமும் துன்பமும் என்னும் இவை இரண்டும் உள்ளி உணர- பின் வரக்கடவனவாய சுகமுந் துக்கமு மென்னப் பட்ட இவற்றினுடைய இரு வகைக் காரணங்களையும் ஆராய்ந் தறியவும், அன்பு ஒழியாது மனம் மகிழ - தம்மே லன்பு நீங்காமல் உள்ளம் களி கூரவும், மன்பதைக் கெல்லாம் ஓது சீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து உரைத்தார் - மக்கட் பரப்புக் கெல்லாம் புகழப் படுஞ் சீரை யுடைய திருவள்ளுவர் வாயுறை வாழ்த்தாகத் திருக்குறளைக் கூறினார்.

இன்பத்தின் காரணம் விதிக் குறளாலும், துன்பத்தின் காரணம் விலக்குக் குறளாலும் சொல்லப்பட்டன. முன்பு அறிதற்குப் பயன் அவற்றைச் செய்தலும் தவிர்தலுமாம், வேண்டுவன வெல்லாந் தொகுத் துணர்த்தலின், மன மகிழ்தல் சொல்லப்பட்டது. அவ்வேதம் போலாது பலர்க்கும் உபயோகியாகக் கூறலின், மன் பதைக்கெல்லா மென்றார். வாயுறை வாழ்த்தி னியல்பு "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின், வேம்புங் கடுவும் போல வெஞ்சொல், தாங்குத

39