பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

203. மதிப்பீடுகள் பற்றிய சட்டமன்ற நெறிமுறை :

(1) மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகளைச் சட்டமன்றப்பேரவையின் வாக்களிப்பிற்கு வைத்திடுதல் ஆகாது; ஆனால், சட்டமன்றத்தில் அந்த மதிப்பீடுகளில் எதனையும் பற்றி விவாதிப்பதை இந்தக் கூறிலுள்ள எதுவும் தடையூறு செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) மேற்சொன்னவற்றில் பிற செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மானியக் கோரிக்கைகளாகச் சட்டமன்றத்தில் முன்வைத்தல் வேண்டும்; மற்றும், கோரிக்கை எதற்கும் ஏற்பிசைவு அளிக்கவோ ஏற்பிசைவளிக்க மறுக்கவோ அக்கோரிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையைக் குறைத்து ஏற்பிசைவு அளிக்கவோ சட்டமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

(3) மானியம் எதுவும், ஆளுநரின் பரிந்துரையின் மீதல்லாமல், கோரப்படுதல் ஆகாது.

204. நிதிஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள் :

(1) பேரவை, 203 ஆம் உறுப்பின்படி மானியங்களை வழங்கிய பின்பு, கூடிய விரைவில்—

(அ) பேரவையால் அவ்வாறு வழங்கப்பட்ட மானியங்களுக்கும்,
(ஆ) அவையில் அல்லது அவைகளில் முன்னரே வைக்கப்பட்ட விவர அறிக்கையில் கண்ட தொகைக்கு எவ்வகையிலும் மேற்படாமல் மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்களுக்கும்

தேவைப்படும் பணம் அனைத்தையும் மாநிலத் திரள்நிதியத்தினின்றும் ஒதுக்களிப்பதற்கு வகைசெய்யும் சட்டமுன்வடிவு ஒன்று அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும்.

(2) அத்தகைய சட்டமுன்வடிவு எதற்கும், மேற்கண்டவாறு வழங்கப்பட்ட மானியம் ஒன்றன் தொகையில் மாறுதலையோ அத்தொகை எதற்கெனக் கோரப்பட்டதோ அதில் மாற்றத்தையோ மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினத்தொகையில் மாறுதலையோ விளைவிப்பதான திருத்தம் எதுவும் மாநிலச் சட்டமன்ற அவையில் அல்லது ஈரவைகளில் எதிலும் முன்மொழியப் படுதல் ஆகாது; அத்தகைய திருத்தம் எதுவும் இந்தக் கூறின்படி ஏற்றுக்கொள்ளத்தகாததா என்பது பற்றி அவையில் தலைமை வகிப்பவரின் முடிபே அறுதியானது ஆகும்.

(3). 205, 206 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, இந்த உறுப்பின் வகையங்களுக்கு இணங்க நிறைவேற்றப்பட்ட சட்டத்தினால் செய்யப்பட்ட நிதி ஒதுக்களிப்பின்படியல்லாமல், மாநிலத் திரள்நிதியத்திலிருந்து பணம் எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது.

205. துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள் :

(1) ஆளுநர்-

(அ) நடப்பு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பணிக்கெனச் செலவிடுவதற்கு 204 ஆம் உறுப்பின் வகையங்களுக்கு இணங்க இயற்றப்பட்ட சட்டம் ஒன்றினால் அதிகாரஅளிப்புப் பெற்ற பணத்தொகை, அந்த ஆண்டிற்குரிய பணிக்குப் போதுமானதன்று எனக் காணப்படுமாயின் அல்லது நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கருதப்படாத புதியதொரு பணியினைப் பொறுத்து குறைநிறைவு செய்வதான அல்லது கூடுதலான செலவினத் தேவை ஒன்று அந்த ஆண்டில் எழுமாயின், அல்லது
(ஆ) ஒரு நிதியாண்டில் பணி ஒன்றிற்கு வழங்கப்பட்ட தொகைக்கு மிகையாகப் பணம் எதுவும் அந்த ஆண்டின்போது அந்தப் பணிக்குச் செலவிடப்பட்டிருக்குமாயின்,

அச்செலவினங்களின் மதிப்பீட்டுத் தொகையைக் காட்டும் பிறிதொரு விவர அறிக்கையை மாநிலச் சட்டமன்ற அவையின் அல்லது அவைகளின் முன்பு வைக்கும்படிச் செய்யவோ அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய மிகைத் தொகைக்கான ஒரு கோரிக்கையை அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையில் முன்னிடும்படிச் செய்யவோ வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/103&oldid=1466224" இலிருந்து மீள்விக்கப்பட்டது