பரிபாடல் 11 முதல் 22 முடிய

பாடல் 11 (விரிகதிர்) தொகு

வையை தொகு

(வரைவு மலிந்த தோழி, ‘கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்டேம்‘
என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.)
பாடியவர்
: நல்லந்துவனார்
இசையமைத்தவர்
: நாகனார்
பண்
: பாலையாழ்
(மழை பொழிய வையையில் நீர் பெருகி ஓடுதல் )

‘விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,

எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,


வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி 5


புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த 10


பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ,

நெரிதரூஉம் வையைப் புனல். 15


(தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்)


‘வரையன புன்னாகமும்,

கரையன சுரபுன்னையும்,

வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்

மனைமாமரம், வாள்வீரம்,

சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20


தாய தோன்றி தீயென மலரா,

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,

வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்

பாய் திரை உந்தித் தருதலான்____ஆய் கோல்

வயவர் அரி மலர்த் துறை என்கோ? 25


அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,

திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்

அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்

பருகு படி மிடறு என்கோ?____பெரிய

திருமருத நீர்ப் பூந் துறை.‘ 30


(கண்டார் கூற்று)

‘ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,

நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,

நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,

உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்

வழியது பக்கத்து அமரர் உண்டி 35


மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;

எண் மதி நிறை, உவா இருள் மதி போல

நாள் குறைபடுதல் காணுநர் யாரே?

சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!

வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற! 40


மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,

காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,

மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்

இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:‘

என ஆங்கு_______ 45


கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை

படையடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்

இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை

ஆடற்கு நீர் அமைந்தது, யாறு


(வையை போர்க்களத்தை ஒத்தல்)

ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர், 50

கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,

புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,

கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை

வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், 55


மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்

துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,

தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்

உருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்

பொரு களம் போலும் தகைத்தே____பரி கவரும் 60


பாய் தேரான் வையை அகம்.


(இளவேனிற் காலத்து ஆடல்)


நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்

தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை

ஒளி திகழ் தகை வகை செறி பொறி

புனை வினைப் பொலங் கோதையவரொடு, 65


பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,

நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,

காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,

சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,

உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் 70


அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை

கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,

நீர் ஒவ்வா வையை! நினக்கு.


(தைந் நீராடல்)


கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,

பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,

மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,

புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,

‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80


அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,

முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்

ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்

நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85


தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,

வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,

பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்

தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90


தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?

நீ உரைத்தி, வையை நதி!


(மகளிர் செயல்கள்)

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,

சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95


பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;

‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று____

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100


பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்

குவளைப் பசுந் தண்டு கொண்டு.

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,

‘நில்லிகா!‘ என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____

மல்லிகா மாலை வளாய். 105


(மகளிர் கருத்தும், வேண்டுகோளும்)


தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,

கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,

நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,

நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்

தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; 110


ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,

தாய் அத் திறம் அறியாள், தாங்கி, ‘தனிச் சேறல்;

ஆயத்தில் கூடு‘ எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே____

சேய் உற்ற கார் நீர் வரவு.

‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்‘ என்மாரும், 115


‘ "கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,

விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்‘ என்மாரும்,

‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,

யாம் வீழ்வார், ஏமம் எய்துக!‘ என்மாரும்,

‘ "கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், 120


மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்_____


(ஒருவன் உவந்தவை காட்டுதல்)


‘கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:

பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:

நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,

பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: 125


கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட

கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:

பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,

கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்

தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை 130


முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,

கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.

என ஆங்கு________


(தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்)

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்_______

மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட 135


கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம

இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்_____

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;

மறு முறை அமையத்தும் இயைக!

நறு நீர் வையை நயத் தகு நிறையே! 140


என்பது, வரைவு மலிந்த தோழி கன்னிப்பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேமென வையையை நோக்கித் :தலைமகன் கேட்பச் சொல்லியது.
ஆசிரியர் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்



பாடல் 12 (வளிபொருமின்) தொகு

வையை தொகு

(கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, ‘இல் வகைப்பட்ட இன்பத்தை உடைய நின்னையும் நினைத்திலர்‘ என, வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, தோழி இயற்பழித்தது.)
பாடியவர்
: நல்வழுதியார்
இசையமைத்தவர்
: நன்னாகனார்
பண்
: பாலையாழ்


(வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல் )

வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,

விளிவு இன்று, கிளையடு மெல் மலை முற்றி,

தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;

ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,

அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய 5


தகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,

நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்

வளி வரல் வையை வரவு.


(புனல் வரவு காண மகளிர் சென்ற வகை)


‘வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,

அம் தண் புனல் வையை யாறு‘ எனக் கேட்டு, 10


மின் அவிர் ஒளி இழை வேயு மோரும்,

பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,

அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்

புகைகெழு சாந்தம் பூசுவோரும்,

கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், 15


வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,

புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,

கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;

வாச நறு நெய் ஆடி, வான் துகள்

மாசு அறக் கண்ணாடி வயக்கி, வண்ணமும் 20


தேசும் ஒளியும் திகழ நோக்கி,

வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;

இடு புணர் வளையடு தொடு தோள்வளையார்,

கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,

ஓசனை கமழும் வாச மேனியர், 25


மட மா மிசையோர்,

பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்______


(நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்)


கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,

வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,

விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி, 30


ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்

உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்

கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;

நிவந்தது, நீத்தம் கரைமேலா: நீத்தம்

கவர்ந்தது போலும், காண்பவர் காதல். 35


(கண்டவர் காணவருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்)
(கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல் )

முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி

ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை

எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை

கில்லா; கேள்வி கேட்டன சிலசில:

ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் 40


மத்தரி தடாரி தண்ணுமை மகுளி

ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;

நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்

அத் தக அரிவையார் அளத்தல் காண்மின்.


(கேட்டன கூறல்)

‘நாணாள்கொல்______தோழி! "நயன் இல் பரத்தையின் 45


தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி

யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி

சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,

நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?‘ என்மரும்,

‘கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50


ஓட்டை மனவன்; உரம் இலி‘ என்மரும்,

‘சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;

நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின்: நிறை

அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?‘ என்மரும்,

‘பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்; 55


நாணாள் அவனை, இந் நாரிகை என்மரும்_____


(கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்)


அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,

கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்

இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,

‘பிழையினை என்ன, பிழை ஒன்றும் காணான், 60

தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.

‘பார்த்தாள், ஒருத்தி நினை என, ‘பார்த்தவளைப்

பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்‘ என்று இரந்து,

மெய்ச் சூள் உறுவானை, மெலியல், ‘ பொய்ச் சூள்‘ என்று , ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல; 65


உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்

புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்

பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,

வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்

பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர, 70


நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து

மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,

எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்

நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல், எஞ்ஞான்றும்

வல்லதால், வையைப் புனல். 75


என ஆங்கு______

மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,

அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,

குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,

நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை, 80


எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;

தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;

பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;

துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:

கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே____ 85


போர் அடு தானையான் யாறு

சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த

கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,

விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,

அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக் 90


காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,

நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.


(நீர்விழவின் சிறப்பு )


துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று ;

‘புனல்‘ என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை ;

உரையின் உயர்ந்தன்று, கவின் 95


போர் ஏற்றன்று, நவின்று ; தகரம்

மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று ;

துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று

விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.


(வையையை வாழ்த்துதல் )


இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர், 100

நன்பல நன்பல நன்பல--வையை!--

நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.

என்பது, கார்ப்பருவத்து வையை நீர் விழவணியிற் பல்வேறு வகைப்பட்ட இன்பம்கூறி, இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலரென வையையை நோக்கித் தலைமகன் கேட்பத் தோழி இயற்பழித்தது
நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

பாடல் 13 (மணிவரை) தொகு

திருமால் தொகு

பாடியவர்
: நல்லெழுதியார்
இசையமைத்தவர்
: பெயர் அறியப்படவில்லை
பண்
: நோதிறம்

கடவுள் வாழ்த்து தொகு

(திருமாலைத் தொழுவார் பெறும் பேறு)

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று

அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,

இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்

நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,

விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5


தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,

நேமியும் வளையும் ஏந்திய கையாந்--

கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10


அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்

திரு வரை அகலம் --தொழுவோர்க்கு

உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.


(எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை)


சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15


அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே; 20


நான்கின் உணரும் நீரும் நீயே;

அதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த

காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25


(பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்)


தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,

மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த

கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்--

மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30


திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்

விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--

நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய

பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35


இலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,

மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!


(புகழ்ந்து போற்றுதல் )


படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;

ஏவல் இன் முது மொழி கூறும், 40


சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;

கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;

வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,

அவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி; 45


முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்

கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;

இருமை வினையும் இல, ஏத்துமவை;

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;

அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை-- 50


அடியும், கையும், கண்ணும், வாயும்;

தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,

தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;

மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;

கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55


வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;

அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,

செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்

எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்

புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!-- 60


அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--

முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;

இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

கடவுள் வாழ்த்து
நல்லெழுநியார்
பண்ணோதிறம்

பாடல் 14 (கார்மலி) தொகு

செவ்வேள் தொகு

பாடியவர்
: கேசவனார்
இசையமைத்தவர்
: கேசவனார்
பண்
: நோதிறம்
(பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், ‘இம் பருவத்தே தலைமகன் வரும்‘ என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
(முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல் )

கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற

நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;

தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்

வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;

அடியுறைமகளிர் ஆடும் தோளே, 5


நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;

வாகை ஒண் பூப் புரையும் முச்சிய

தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,

‘நீடன்மின் வாரும்‘ என்பவர் சொல் போன்றனவே;

நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; 10


வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,

அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;

நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்

வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,

விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15


பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,

கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,


(முருகனைப் புகழ்ந்து போற்றுதல் )


சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!

கறை இல் கார் மழை பொங்கி அன்ன

நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! 20


அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!

கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை

எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!

பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் 25


சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!

இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,

ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!--


(விண்ணப்பம் )

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,

துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்

இன்னும் இன்னும் அவை ஆகுக--

தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! 32

என்பது, பருவங்கண்டு அழிந்த தலைமகள்கேட்ப முருகவேளைப் பரவுவாளாய், இப்பருவத்தே தலைமகனை வருமென்பது படத் தோழி வற்புறுத்தியது
கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண்ணோதிறம்

பாடல் 15 (புலவரை) தொகு

திருமால் தொகு

கடவுள் வாழ்த்து தொகு

பாடியவர்
இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர்
மருத்துவன் நல்லச்சுதனார்
பண்
நோதிறம்


(திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு )


புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,

நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்

தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்

புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்

பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5


நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்

நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:

சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்

மலர் அகல் மார்பின் மை படி குடுமிய

குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10


சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,

புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,

எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15


ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?

அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்

எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.


(‘திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக' எனல்)


அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்

மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20


அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,

சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்

சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--

தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--

நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25


யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,

மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,

பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே

நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!


(மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்)


சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30


சினையெலாம் செயலை மலர, காய் கனி

உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,

மாயோன் ஒத்த இன் நிலைத்தே.


(சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்)


சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--

இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35


பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது

கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.


(குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் )


மக முயங்கு மந்தி வரைவரை பாய,

முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,

மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40


குருகு இலை உதிர, குயிலினம் கூவ,

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்

நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,

சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்

கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45


(குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்)


தையலவரொடும், தந்தாரவரொடும்

கைம் மகவோடும், காதலவரொடும்,

தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50


எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்

மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்

அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.


(பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்)


கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;

ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55


புள் அணி பொலங் கொடியவை;

வள் அணி வளை நாஞ்சிலவை,

சலம் புரி தண்டு ஏந்தினவை;

வலம்புரி வய நேமியவை;

வரி சிலை வய அம்பினவை; 60


புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;

என ஆங்கு-

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி

இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,

‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,

பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66


கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் பாட்டு
பண் நோதிறம்.



பாடல் 16 (கரையேகை) தொகு

வையை தொகு

(காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது.)
பாடியவர்
: நல்வழிசியார்
இசையமைத்தவர்
: நல்லச்சுதனார்
பண்
: நோதிறம்
(வையையில் நீர் வரவு )

கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,

மை படு சிலம்பின் கறியடும், சாந்தொடும்,

நெய் குடை தயிரின் நுரையடும், பிறவொடும்,

எவ் வயினானும்--மீதுமீது அழியும்.

துறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், 5


பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி

வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்

கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,

தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்

தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே. 10


செறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,

படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,

களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.

காவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்

நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே-- 15


கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.

கான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன்

தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்

பூத்தன்று--வையை வரவு.


(தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்)

கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, 20


குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்,

பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,

இருந் துகில் தானையின் ஒற்றி, ‘பொருந்தலை;

பூத்தனள்; நீங்கு‘ எனப் பொய் ஆற்றால், தோழியர்--

தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் 25


நாற்றத்தின் போற்றி, நகையடும் போத்தந்து,

இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,

மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,

குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,

‘பூத்தனள் நங்கை; பொலிக!‘ எனநாணுதல் 30


வாய்த்தன்றால்--வையை வரவு.

(வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்)


மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்

கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்

நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்

மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்; 35


மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய

வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,

தேன் இமிர் வையைக்கு இயல்பு.


(வையைக்கு உரிய இயல்பு )


கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,

ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, 40


பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,

வெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்

அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து

வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,

எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் 45

தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்--

கொடித் தேரான் வையைக்கு இயல்பு.


(தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்)


வரை ஆர்க்கும் புயல்; கரை

திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;

கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், 50


பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்

நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,

பூத்த புகையும், அவியும் புலராமை

மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்

வறாஅற்க, வைகை! நினக்கு. 55


என்பது, காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட அவள் புனலாடியவாறு கூறி வாயின்மறுத்தது.
நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்

பாடல் 17 (தேம்படுமலர்) தொகு

செவ்வேள் தொகு

கடவுள் வாழ்த்து
பாடியவர்
: நல்லழிசியார்
இசையமைத்தவர்
: நல்லச்சுதனார்
பண்
: நோதிறம்


(மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர் )

தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,

ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,

விடை அரை அசைத்த, வேடியவலன், கடிமரம்

பரவினர் உரையடு பண்ணிய இசையினர்,

விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து-- 5

கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--

மாலை மாலை, அடி உறை, இயைநர்,

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?


(மாறிமாறி எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்)

ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,

ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, 10


ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,

ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,

ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,

ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,

ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, 15


ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,

ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்

நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,

ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,

மாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல்-- 20


மாறு அட்டான் குன்றம்--உடைத்து.


(பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்)

பாடல் சான்று பல் புகழ் முற்றிய

கூடலொடு பரங்குன்றின் இடை,

கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,

நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; 25


மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்

சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.

வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,

திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30


வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;

தேயா மண்டிலம் காணுமாறு இன்று.


(பரங்குன்றின் அலங்காரம்)

வளை முன் கை வணங்கு இறையார்,

அணை மென் தோள் அசைபு ஒத்தார்

தார் மார்பின் தகை இயலார், 35


ஈர மாலை இயல் அணியார்,

மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,

சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;

அனைய, பரங்குன்றின் அணி.


(தெய்வ விழவும் விருந்தயர்வும்)

கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ; 40


மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;

தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,

அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,

தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,

கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும், 45


கை ஊழ் தடுமாற்றம் நன்று.


(முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்)

என ஆங்கு,

மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,

பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ ! பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, 50


அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;

அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்--

ஏம வைகல் பெறுக, யாம் எனவே. 53

கடவுள் வாழ்த்து
நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்



பாடல் 18 (போரெதிர்ந்து) தொகு

செவ்வேள் தொகு

கடவுள் வாழ்த்து
பாடியவர்
: குன்றம்பூதனார்
இசையமைத்தவர்
: நல்லச்சுதனார்
பண்
: காந்தாரம்
(இமயத்தொடு நிகர்க்கும் குன்று )

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,

கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,

நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,

சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்

சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, 5


ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.


தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்

ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்

(உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்)

‘உள்ளியது உணர்ந்தேன்; அ·து உரை இனி, நீ எம்மை

எள்ளுதல் மறைத்தல் ஓம்பு‘ என்பாளைப் பெயர்த்து, அவன், 10


‘காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்

பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை

ஏதிலா நோக்குதி‘ என்று, ஆங்கு உணர்ப்பித்தல்

ஆய் தேரான் குன்ற இயல்பு.


(பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று)

ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், 15

மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,

கை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?

மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:

மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி--

நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம் 20

பூத்தன--பாணா! நின் பாட்டு.

(பரங்குன்றத்திலுள்ள அம்பலம்)

தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,

மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,

கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,

இருள் போழும் கொடி மின்னால்-- 25


வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு!--நின்

ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்.


(குன்றத்துக் காட்சிகள்)

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி-- 30


சூர் ததும்பும் வரைய காவால்,

கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,

ஏர் ததும்புவன பூ அணி செறிவு,

போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்

காந்தள், செறிந்த கவின், 35


கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்

புரி நெகிழ்ப்பார் போன்றன கை.

அச்சிரக்கால் ஆர்த்து--அணி மழை--கோலின்றே,

வச்சிரத்தான் வானவில்லு.


(குன்றத்தின் சிறப்பு)


வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின-- 40

வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.

வட்டு உருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்

சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,

போர் ததும்பும் அரவம் போல்,

கருவி ஆர்ப்ப, கருவி நின்றன--குன்றம். 45


அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;

குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;

எருவை கோப்ப, எழில் அணி திருவில்

வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,

கூனி வளைத்த--சுனை, 50


(முருகவேளை வாழ்த்துதல் )

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,

சுருதியும் பூவும் சுடரும் கூடி,

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,

செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,

உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,

பிரியாது இருக்க--எம் சுற்றமோடு உடனே! 56

கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

பாடல் 19 (நிலவரை) தொகு

செவ்வேள் தொகு

கடவுள் வாழ்த்து
பாடியவர்
: நப்பண்ணனார்
இசையமைத்தவர்
: மருத்துவன் நல்லச்சுதனார்
பண்
: காந்தாரம்
(வள்ளியை முருகன் வதுவை கொண்டது )

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,

புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,

‘அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்

இரு நிலத்தோரும் இயைக!‘ என, ஈத்த நின்

தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு 5


சாறு கொள் துறக்கத்தவளடு

மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.


(கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி)

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,

கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,

அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார், 10


சிறந்தோர் உலகம் படருநர் போல,

உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,

புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,

தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்

குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு-- 15


நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய

தார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்

ஆர் வேலை யாத்திரை செல் யாறு.


(பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி )


சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்

புடை வரு சூழல்--புலம் மாண் வழுதி 20


மட மயில் ஓரும் மனையவரோடும்,

கடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்

சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்

பாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்

சூடி அசையும் சுவல்மிசைத் தானையின், 25


பாடிய நாவின், பரந்த உவகையின்,

நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,

படு மணி யானை நெடியாய்! நீ மேய

கடி நகர் சூழ் நுவலுங்கால்.


(குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை)

தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, 30


வம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--

வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;

திண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்

கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து

பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே, 35


குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற

இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!


(மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை)


குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,

கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,

தெய்வப் பிரமம் செய்குவோரும், 40


கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் , யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,

வேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;

கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,

ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்; 45


என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;

‘இரதி காமன், இவள் இவன்‘ எனாஅ,

விரகியர் வினவ, வினா இறுப்போரும்;

‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன் 50


சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு

ஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்:

இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,

துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,

நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55


சோபன நிலையது--துணி பரங்குன்றத்து

மாஅல் முருகன் மாட மருங்கு .

(குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி)

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,

பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, ‘யான்

வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் 60


ஏஎ, ஓஒ!‘ என விளி ஏற்பிக்க,

‘ஏஎ, ஓஒ‘ என்று ஏலா அவ் விளி

அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்

செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை

மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே-- 65


வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.


(இள மகளிரின் மருட்சி)

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்

சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,

உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர் முகிழ் உற, அவை கிடப்ப, 70

‘தெரி மலர், நனை, உறுவ,

ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த

மைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு‘ என

ஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,


(குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்)

பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், 75


கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;

நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க 80


மணந்தவை, போல, வரை மலை எல்லாம்

நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;

விடியல் வியல் வானம் போலப் பொலியும்--

நெடியாய்! நின் குன்றின்மிசை.


(கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்)

(தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்)

நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால் 85


புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.

பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,

மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,

பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,

கன்னிமை கனிந்த காலத்தார், நின் 90


கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்

குறுகிச் சிறப்பு உணாக்கால்.


(முருகப் பெருமானை வாழ்த்துதல் )

குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் 95


சிறப்பு உணாக் கேட்டி செவி.

உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே

படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;

உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்

விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி; 100


எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,

தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,

அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்

கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;

உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே! 105

கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

பாடல் 20 (கடல்குறை) தொகு

வையை தொகு

(பருவ வருவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)

பாடியவர்
: நல்லந்துவனார்
இசையமைத்தவர்
: நல்லச்சுதனார்
பண்
: காந்தாரம்
(புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்)

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,

உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை

முற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்

குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. 5


காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி

மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்

வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,

தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால

கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; 10


தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.


(புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வகை)

தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று

வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,

ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, 15


திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,

வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,

வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,

கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,

மகளிர் கோதை மைந்தர் புனையவும், 20


மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,

முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,

ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்

கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,

மாட மறுகின் மருவி மறுகுற, 25


கூடல் விழையும் தகைத்து--தகை வையை.


(தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி)

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,

தகை வகை தைஇயினார் தார்;

வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்

சூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும் 30


இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்

அயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர்

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,

கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,

நொந்து, ‘அவள் மாற்றாள் இவள்‘ என நோக்க, 35


(தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதலும்)

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;

செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன

நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,

ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.


(தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்)

என--ஆங்கு, 40


ஒய்யப் போவாளை, ‘உறழ்த்தோள் இவ் வாணுதல்‘

வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய

நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,

‘செறி நிரைப் பெண்‘ --வல் உறழ்பு--‘யாது தொடர்பு?‘ என்ன

மறலினாள், மாற்றாள் மகள். 45


(தலைமகளின் திகைப்பு)

வாய் வாளா நின்றாள்,

செறிநகை சித்தம் திகைத்து.


(ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்)

ஆயத்து ஒருத்தி, அவளை, ‘அமர் காமம்

மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!

பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் 50


துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!

முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,

காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,

மூரி தவிர முடுக்கு முது சாடி!

மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் 55


தட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால்

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்

தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்

பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்

வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, 60


மத்திகை மாலையா மோதி, அவையத்துத்

தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட

விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,

தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,

நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?‘ என்னாமுன்-- 65


(பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று)

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு

ஊடினார், வையையகத்து,

‘சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க;

மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை

வந்திக்க வார்‘ என --- ‘மனத் தகக நோய் இது; 70


(பரத்தையின் பதில் உரை)

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;

போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,

மாற்றாளை மாற்றாள் வரவு.‘


(தலைவி கூற்று)

‘அ... சொல் நல்லவை நாணாமல்

தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; 75


எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்

வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,

தந்தானைத் தந்தே, தருக்கு.‘


(பரத்தையின் மறுமொழி)

மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்

கால சிலம்பும் கழற்றுவான்; சால, 80


அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;

கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.‘

என ஆங்கு--


(கண்டார் சிலருடைய கூற்று)

(பரத்தையை நோக்கி உரைத்தல்)

வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு

நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. 85


(தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்)

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்

காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;

தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்

இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;

நிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்! 90


‘மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்

அகலம் கடிகுவேம்‘ என்பவை யார்க்கானும்

முடி பொருள் அன்று--முனியல்!

கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!‘

வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்

கருங்கை வழியே பாயும் காட்சி

என--ஆங்கு 95


இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்,

தென்னவன் வையைச் சிறப்பு,

கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,

அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,

குடை விரிந்தவை போலக் கோலும் மலர், 100


சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,

சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,

அருவி சொரிந்த திரையின் துரந்து;

நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து--

கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்-- 105


நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்

கடி மதில் பெய்யும் பொழுது.


(பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு)

நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும்,

காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,

தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்

பூ மலி வையைக்கு இயல்பு. 111


என்பது, பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமைகண்டுதூதுவிடச்சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை நீர்விழவணியும் கூறியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்.

பாடல் 21 (ஊர்ந்ததை) தொகு

செவ்வேள் தொகு

கடவுள் வாழ்த்து
பாடியவர்
: நல்லச்சுதனார்
இசையமைத்தவர்
: கண்ணகனார்
பண்
: காந்தாரம்
(பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்)

ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,

பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.

தொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை

துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,

வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, 5

வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,

புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.

கையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,

புள்ளடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;

பூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த 10


உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.

அமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,

நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை

அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,

தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். 15


‘குன்றத்து அடி உறை இயைக!‘ எனப் பரவுதும்--

வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.


(பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்)

சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,

துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின், 20


நுனை இலங்கு எ·கெனச் சிவந்த நோக்கமொடு

துணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்;

நிழல் காண் மண்டிலம் நோக்கி,

அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;

பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம் 25


உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;

பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்

ஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்-

திட்டோய்! நின் குன்றின்மிசை.


(குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்)

மிசை படு சாந்தாற்றி போல, எழிலி 30


இசை படு பக்கம், இரு பாலும் கோலி,

விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,

முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;

யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; 35


பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;

ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்-

இரங்கு முரசினான் குன்று.


(சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்)

தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்

மீ நீர் நிவந்த விறலிழை, ‘ கேள்வனை 40


வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என,

பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது

அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,

கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,

தழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று. 45


(குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்)

வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய

தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,

கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த

புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,

உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த 50


முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,

அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த-

பசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து.


(சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்)

கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்,

ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த 55


செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,

மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்

பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,

பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்

சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான், 60


கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்-

ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்

வாடை உளர் கொம்பர் போன்ம்.

வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்

தோள் ஊழ் பெயர்ப்பவள் கண். 65


(முருகவேளை வாழ்த்துதல்)

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;

ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;

நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, ‘நின் அடி உறை

இன்று போல் இயைக!‘ எனப் பரவுதும்-

ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே. 70

கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்.



பாடல் 22 (ஒளிறுவாட்) தொகு

வையை தொகு

பாடியவர்
: தெரியவில்லை
இசையமைத்தவர்
: தெரியவில்லை
பண்
: தெரியவில்லை

(இப்பாடலின் இடையில் சில சொற்களும் இறுதிட்ட குறியும் கிடைக்கவில்லை)

(மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்)

ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த

களிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,

அரசுபடக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்

முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,

ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை 5


விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,

கண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்

வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை

ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்

தானையின் ஊழி....தாவூக் கத்தின், 10


போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-

..... ......... நீக்கிப் பு.. ..... .....

கான மலைத்தரை கொன்று மணல பினறி

வான மலைத்த ......வ ........ ....... ........

..... லைத்தவ மண முரசு எறிதா, 15


தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,


(மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு)

பொறிவி யாற்றுறி--துவர், புகை, சாந்தம்

எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,

நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,

பிற தொழின ....ம் பின்பின் தொடர; 20


செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,

தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;

மாவும், களிறும், மணி அணி வேசரி,

காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி; 25


வேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்

போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,

தார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்

கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,

வார் அணி கொம்மை, வகை அமை மேகலை, 30


ஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர்-

‘சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்

நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்

தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின். 35


(திருமருத முன்துறைக் காட்சிகள்)

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு

எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,

கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்

புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,

ஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத் 40


தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,

..... துடிச் சீர் நடத்த வளி நடன்

மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,

ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-

தீம் புனல் வையைத் திருமருத முந்துறையால். 45


கோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,

.... ..... .......புரை தீர் நெடு மென்

தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,

நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,

....... ........... ......... ..........


எழுபது பரிபாடல்களுள் முழுமையாகக் கிடைத்தவை இந்த இருபத்திரண்டு பாடல்களே


பரிபாடல் முற்றிற்று தொகு

பார்க்க

பரிபாடல்

பரிபாடல் உரைச்சிறப்புப் பாயிரம்

பரிபாடல் 01 முதல் 10 முடிய

பரிபாடல் திரட்டு

[[]] [[]] [[]] [[]]

"https://ta.wikisource.org/w/index.php?title=பரிபாடல்_11_முதல்_22_முடிய&oldid=12033" இலிருந்து மீள்விக்கப்பட்டது