பழைய கணக்கு/கிங்காங் சிந்திய ரத்தம்



கிங்காங் சிந்திய ரத்தம்

ரு நாள் என் நண்பர் சின்ன அண்ணாமலை என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எப்போதும் போல் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்.

“சாவி, இன்றைக்கு நாம் மதுரை போகிறோம். இந்தாங்க நூறு ரூபாய். இதைச் செலவுக்கு வீட்டில் கொடுத்துட்டுப் புறப்படுங்க” என்றார்.

“என்ன விஷயம்?”

“அங்கே கிங்காங்-தாராசிங் சண்டை நடக்கப் போகுது. நடத்தப் போகிறவர்கள் செட்டிநாட்டைச் சேர்ந்த என் நண்பர்கள். நாம ரெண்டு பேரும் குஸ்தி சம்பந்தமான விளம்பர வேலைகளைக் கவனிக்கப் போகிறோம். மாசம் ஐந்நூறு ரூபாய் சம்பளம்” என்றார்.

நூறு ரூபாயை வாங்கி விட்டில் கொடுத்துவிட்டு, மாற்றுச் சட்டை இல்லாத நிலையில் மதுரைக்குக் கிளம்பி விட்டேன்.

அங்கே போய் ‘மல்யுத்த மலர்’ என்று ஒரு பத்திரிகை தொடங்கினேன். வாரத்தில் மூன்று நாட்கள் குஸ்தி நடக்கும். அந்த மூன்று நாட்கள் மட்டுமே பத்திரிகை வரும். ஸ்டேடியத்திலேயே அச்சிடும் பதினைந்தாயிரம் பிரதிகளும் விற்றுப் போகும்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து மல்யுத்த வீரர்கள் வந்திருந்தாா்கள. தமுக்கம் மைதானத்தில் ஸ்டேடியம் அமைத்தோம்.சீனாவிலிருந்து வந்திருந்த வாங் பக்லி என்ற குஸ்தி வீரர் மிகத் திறமைசாலி. ரெஃபரியாக இருந்து நியாயம் வழங்குவதில் வல்லவர்.

கிங்காங்கும் தாராசிங்கும் ஒருவரையொருவர் மலைப் பாம்புகளைப் போல் பிண்ணிக் கொண்டு பிடிவாதம் காட்டும் நேரங்களில் ரெஃபரி வாங் பக்லி கிங்காங் காதருகில் போய் அழுத்தமாக விசிலே ஊதுவார். அப்போதும் கிங்காங் தன் பிடியிலிருந்து தாராசிங்கை விட மாட்டார். தாராசிங் தலை முடியைப் பிடித்து இழுத்து ஃபெளல் கேம் ஆடுவார். வாங் பக்லிக்குக் கோபம் வரும். ஒரு ஜம்ப் செய்து கிங்காங் தோள் உயரத்துக்கு மேலே கிளம்பி அப்படியே தமது இரு கால்களாலும் கிங்காங்கை உதைத்துக் கீழே தள்ளிவிட்டுத் தானும் விழுவார். வாங் பக்லி அப்படி மேலே கிளம்பும்போது ஆகாயத்தில் பறப்பது போலிருக்கும். இந்த அபூர்வக் காட்சியைக் காண்பதற்காகவே பலபேர் டிக்கட் வாங்கிக் கொண்டு குஸ்தி பார்க்க வருவார்கள்.

நானும் சின்ன அண்ணாமலையும் ‘வானத்தில் பறக்கும் சீனத்து வீரர்’ என்று வாங் பக்லிக்கு ஒரு பெயர் சூட்டினோம்.

‘நண்டுப் பிடி’ என்பது சர்வதேச மல்யுத்த வகையில் ஒன்று. குஸ்தி போடும் போது எதிரியின் தலேமுடியைப் பிடித்து இழுக்கக் கூடாது என்பது விதி. கிங்காங் அடிக்கடி தாராசிங்கின் தலைமுடியைப் பிடித்து இழுப்பார். அப்போதெல்லாம் நான் ஒலிபெருக்கியில் “தாராசிங் போடுவதோ நண்டுப் பிடி. கிங்காங் போடுவதோ சிண்டுப் பிடி” என்பேன். எல்லோரும் சிரிப்பார்கள்!

“மல்யுத்தம் பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தால் மட்டும் போதாது, அதை ஒரு பரபரப்போடு நடத்த வேண்டும்” என்று நானும் சின்ன அண்ணாமலையும் விரும்பினோம். தினம் தினம் புதுப்புது உத்திகளைப் புகுத்தி வசூலைப் பெருக்குவதில் கவனம் செலுத்தினோம். இந்தக் கலையில் எங்களுக்குள்ள திறமை கண்டு கிங்காங்கே வியந்து போனார்!

ஒருநாள் கிங்காங்கைத் தனிமையில் சந்தித்து அன்று மாலை நடக்க வேண்டிய நிகழ்ச்சி பற்றி விவாதித்தோம். எங்கள் திட்டப்படி மூன்றாவது ரவுண்டில் கிங்காங் தாராசிங்கை வலுச் சண்டைக்கு இழுத்து, மேடையிலிருந்து தாராசிங்கைக் கீழே தள்ள வேண்டும். கீழே போய் விழும் தாராசிங் கோபமுற்று மேடை மீது தாவி கிங்காங்கைத் தனது இரண்டு கைகளாலும் உயரத் தூக்கித் தலைக்கு மேல் மூன்று முறை தட்டாமாலே சுற்றிக் கீழே போட வேண்டும். போட்டதும் கிங்காங் மீது அமர்ந்து அவர் நெற்றியில் ரத்தம் கசியும் அளவுக்கு அடிக்க வேண்டும். அந்த ரத்தத்தை வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்துக் குறுக்கே வரும் ரெஃபரியின் பனியன் மீது அப்ப வேண்டும். ரெஃபரி அணிந்துள்ள வெள்ளை வெளேரென்ற பனியன் மீது படியும் அந்த ரத்தம் சூரிய ஒளி போன்ற விளக்கு வெளிச்சத்தில் சுற்றி உள்ள மக்களுக்குப் பளிச்சென்று தெரியும் ரசிகர் கூட்டம் இதை உண்மைச் சண்டை என்றே நம்பிவிடும். அந்த நேரம் பார்த்து கிங்காங் எழுந்து தாராசிங்கைச் சவால் சண்டைக்கு அழைத்தால் மறுநாள் வசூல் இரண்டு மடங்கு கூடும் என்பது எங்கள் யோசனை.

கிங்காங்கின் நெற்றிச் சதை மூன்று மடிப்புகள் கொண்டது. அந்த மடிப்புகளுக்கிடையே அன்று மேடைக்குச் செல்லுமுன் ‘ப்ளே’டினால் லேசாகக் கீறிக் கொண்டார். பின்னர் அதைத் துடைத்துச் சரி செய்து விட்டார். அன்று மாலை மேடையில் கிங்காங் நெற்றியில் தாராசிங் அடித்த போது ஏற்கனவே கீறி வைத்திருந்த இடத்தில் ரத்தம் குபுகுபுவென்று பெருகியது.

நாங்கள் திட்டமிட்டபடியே தாராசிங் அந்த ரத்தத்தை எடுத்து ரெஃபரியின் பனியனில் அப்பினார். ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ரத்தத்தைக் கண்டதும் நரம்பில் முறுக்கேறிக் கூச்சலிட்டனர். போதாக் குறைக்கு கிங்காங் வேறு ரெஃபரி மீது பாய்ந்து அவர் பனியனைப் பிடித்து இழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்ட போது ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது.

பனியன அவர் அப்படிக் கிழித்துப் போட்டதும், “அடாடா! பனியனையே கிழிச்சுட்டான்யா! உண்மைச் சண்டையில்லேன்ன அப்படிக் கிழிப்பானா?” என்று அவ்வளவு பேரும் பேசிக் கொண்டு போனார்கள. அன்று வசூலான தொகை முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! பனியன் விலையோ பத்து ரூபாய்! முப்பத்திரண்டாயிரம் வசூலாகும் போது பத்து ரூபாய் பனியனைக் கிழிப்பது ஒரு பெரிய விஷயமா என்ன?