பழைய கணக்கு/நீங்க என்ன வட ஆற்காடா?

நீங்க என்ன வட ஆற்காடா?

பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற திரு ஜி. டி. நாயுடுவின் மகன் கோபால் திருமணத்திற்கு நான் போயிருந்தேன்.

என்னைக் கண்டதும் திரு நாயுடு அவர்கள் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “நீங்கள் இன்று முழுதும் என் பக்கத்திலேயே இருக்க வேண்டும்; என்னுடனையே சாப்பிடலாம்” என்று ஓர் உத்தரவு போல் கூறிவிட்டார். அவர் பேச்சைத் தட்ட முடியாமல் நான் அன்று முழுதும் அவர் கூடவே இருந்தேன்.

சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய், “வாங்க. சமையல்கட்டு வரை போயிட்டு வரலாம்” என்று என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே சமையல் ஏக தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கூடை கூடையாக அப்பளங்களைப் பொரித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நாயுடுவின் முகம் ஒரு மாதிரியாக மாறியது. விடுவிடுவென்று எல்லா அப்பளக் கூடைகளையும் குழாயடிக்கு இழுத்துச் சென்று குழாயைத் திறந்து விட்டு விட்டார். சில வினாடிகளில் அவ்வளவு அப்பளங்களும் நனைந்து ஊறிப் பஞ்சாய் அமுங்கிப் போயின. அப்புறம்தான் நாயுடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

“இவ்வளவு அப்பளங்களையும் தண்ணீரில் நனைத்து வீணாக்கி விட்டீர்களே” என்பது போல் நான் ‘த்சூ!’ கொட்டினேன்.

நாயுடு சொன்னார்:

“அப்பளத்துக்கான மாவு தயார் செய்கிற இடத்தைப் பாலக்காட்டில் ஒரு சமயம் பார்த்தேன். அதிலிருந்து எனக்கு இந்த அப்பளத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டது.”

“அங்கே ஒரு ஆள் தன் அழுக்குக் கால்களால் அப்பள மாவை மிதித்துக் கொண்டிருந்தான். அந்த இடமும் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தது முதல், இனி கடையில் அப்பளம் வாங்கிச் சாப்பிடுவதில்லை” என்ற முடிவெடித்து விட்டேன். இப்போதெல்லாம் நான் அப்பளம் சாப்பிடுவதென்றால் ஒன்று அது என் வீட்டில் தயார் செய்ததாக இருக்க வேண்டும். அல்லது கி. ஆ. பெ. விசுவநாதம் வீட்டிலிருந்து வரவேண்டும். இவற்றைத் தவிர வேறு எந்த அப்பளத்தையும் சாப்பிடுவதில்லை. எனவேதான் இந்தக் கல்யாணத்தில் யாருக்கும் அப்பளம் போடக் கூடாது என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டிருந்தேன். ஆனால் என்னையும் மீறி என் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது அதனால்தான் இங்கு வந்து பார்த்தேன். பாத்தீங்களா? நான் நினைத்தது போலவே இங்கு நடந்திருக்கிறது?” என்றார்.

நாயுடுவின் பிடிவாதம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே, ஆனாலும் ஒரு கலியாணத்தில் அப்பளம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவேதான். நாயுடு குடும்பத்தினர் அவருக்குத் தெரியாமல் அப்பளத்தைக் கடையில் வாங்கி வந்து பொரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சில காலம் கழித்து, மீண்டும் நான் நாயுடுவின் பங்களாவுக்குப் போயிருந்தேன். சாப்பிட்டு முடிந்ததும் மேஜையிலிருந்த பழத் தட்டைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் தயக்கம் காட்டினேன்.

நாயுடுவே ஒரு வாழைப் பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, “இதைச் சாப்பிட்டு விட்டு இது என்ன ஜாதிப்பழம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

சாப்பிட்டுப் பார்த்தேன். ரொம்பவும் ருசியாக இருந்தது.

“ரஸ்தாளி” என்றேன்.

உடனே நாயுடு, “உங்களுக்கு வடஆற்காடு மாவட்டமா?” என்று கேட்டார்.

“ஆமாம்; அதெப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்றேன் நான் வியப்புடன்.

“இந்த மாதிரி என் வீட்டுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் இந்தப் பழத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறேன். அவரவர்கள் தங்கள் மாவட்டதில் எந்த வகை வாழைப்பழம் கிடைக்கிறதோ அந்தப் பெயரைச் சொல்லி அது மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அந்த ருசி ஒன்றுதான் அவர்களுக்குப் பழக்கமானதால் அப்படிச் சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்கள் பழத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கு அது விளையும் மாவட்டம் தெரிந்து விடுகிறது! அதனால் தான் இப்போது நீங்கள் ரஸ்தாளி என்றதும் வடஆற்காடு என்று சொல்லி விட்டேன்” என்று கூறிச் சிரித்தார்.

“அப்படியானால் உண்மையிலேயே இது என்ன ஜாதி?” என்று கேட்டேன்.

“இது எந்த ஜாதியும் இல்லை. தனி ஜாதி. கோபால் கல்யாணத்தின் போது அப்பளத்தின் மீது குழாய்த் தண்ணிர் கொட்டியது ஞாபகம் இருக்கிறதா? தண்ணீரில் ஊறிப் போன அந்த அப்பளங்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து மூன்றாவது நாள் வெளியே எடுத்தேன். என் தோட்டத்திலுள்ள வாழை மரங்களின் அடிப்பாகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் துளைகள் செய்தேன். அந்தத் துளைகளில் ஊறிய அப்பளங்களைப் போட்டு அடைத்தேன். ஆச்சரியப்படும் அளவுக்கு மரம் வேகமாக வளர்ந்து, பழங்கள் பெரிதாகவும் ரொம்ப ருசியாகவும் இருக்கின்றன. அந்தப் பழம்தான் நீங்கள் இப்போது சாப்பிட்டது. இப்படித்தான் நான் எதையாவது செய்யப்போக அதுவே ஒரு புதுமை கலந்த விந்தையாகி விடுகிறது. உடனே தாவர விஞ்ஞானி நாயுடு என்று உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எனக்குப் பட்டம் சூட்டி விடுகிருர்கள்” என்றார் நாயுடு.