பழைய கணக்கு/பெரியார் எனக்கு வழிகாட்டி



பெரியார் எனக்கு வழிகாட்டி

பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிராமணர்களை எதிர்த்து அவர் கடுமையாகப் பேசும் போது, நான் பிராமண வகுப்பில் பிறந்தவன் என்ற முறையில் எனக்குக் கோபம் வருவதுண்டு. ஆனாலும் அவர் பேச்சில் இழையோடும் நகைச்சுவையை நான் மிகவும் ரசிப்பேன். அவர் கூட்டங்களுக்குப் போய் ஒரு மூலையில் ஒதுங்கி, பேச்சை நின்று கவனிப்பேன்.

ஆனந்தவிகடனில் ஈ. வெ. ரா. அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்காக ஒருமுறை திருச்சி பெரியார் மாளிகைக்குப் போயிருந்தேன். பல்வேறு விஷயங்கள் குறித்து பெரியார் தமது தீர்க்கமான கருத்துக்களை வெளியிட்டார். அப்போது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.

“கல்லூரி அட்மிஷன், அரசாங்க வேலை இவற்றுக்கு வகுப்புவாரி விகிதாசார ஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக வாதிடுகிறீர்களே, அது ஏன்? தகுதியின் அடிப்படையில் இவை அமைவது நல்லது இல்லையா? தகுதியுள்ளவன் முன்னுக்கு வருவதில் உங்களுக்கென்ன ஆட்சேபனை?” என்று கேட்டேன்.

“தகுதி என்ன தகுதி; வெங்காயம் நாலு தடவை திருப்பித் திருப்பி செஞ்சா எந்தத் தொழிலும் பழக்கமாயிட்டுப் போகுது. ஒரு முட்டாள் பத்து வருஷம் ஒரே தொழிலைச் செய்தால் அந்தத் தொழிலில் அவன் திறமைசாலி ஆயிடறான். அவ்வளவு தானே! ஜெயிலுக்குப் போய்ப் பாரேன். ஆங்கேயும் ஜாதி விகிதாசார அடிப்படையிலேதானே கைதிகள் இருக்காங்க...”

“உங்கள் கணக்குப்படி பார்த்தால் பிராமணர்களின் எண்ணிக்கை வெளியில் இருக்கும் அளவுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் ஜெயிலில் இல்லையே?”

“அதுக்கென்ன பண்றது? பார்ப்பான் அடிதடி சண்டை கொலை கொள்ளைக்குப் பயந்தவன். அதனால ஜெயில்ல அவங்க அதிகமா இல்லே” என்றார் பெரியார்.

பேச்சுக்கிடையில் மணியம்மையை அழைத்து, “இவங்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடு. ஆனந்தவிகடன்லேருந்து வந்திருக்காங்க” என்றார், வாய்ப்பை நழுவ விடாமல் நான் அப்போது அவரிடம் கேட்டேன். “இப்போது நான் உங்க வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறேன், பார்த்தீங்களா? போன தலைமுறையில் இப்படி நடந்திருக்குமா? நான் ஆசார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான், இதற்கென்ன சொல்றீங்க?”

“இன்றைக்கு நீ என் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறாய் என்றால் அதுகூட என் பிரசாரத்தில் ஏற்பட்ட மாற்றம்தானே? ஒரு சங்கதி சொல்றேன் கேளுங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னால என் வீட்டுக்கு ஒரு பிராமணர் வந்தார். எங்கள் குடும்பத்து நண்பர் அவர். ‘ஏதாவது தாகத்துக்கு சாப்பிடறீங்களா, ஐயா!’ என்று அவரைக் கேட்டோம். ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டார். நாங்க மேலும் வற்புறுத்தவே, சரி. கொஞ்சம் மோரும் தண்ணியும் இருந்தா தனித் தனியாகக் கொண்டாங்க என்றார், கொடுத்தோம். அந்த மோரில் கொஞ்சம் தண்ணியைச் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார். அதென்னய்யா தண்ணி சேர்த்துச் சாப்பிடறீங்க”ன்னு கேட்டோம்.

‘மோரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து விட்டால் மோர் சுத்தமாயிடும்?’னு சொன்னர்.

‘மோர் எங்க வீட்டுது. தண்ணியும் எங்க வீட்டுது. எங்க வீட்டுத் தண்ணி எங்க வீட்டு மோரைச் சுத்தப்படுத்திடுமா? என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே போயிட்டார்.“

பெரியாரைப் பார்க்க நாலைந்து பேர் கூட்டமாக வெளியே காத்திருந்தார்கள். அவர்களை உள்ளே வரச் சொல்லி, “என்ன விஷயம்?” என்று கேட்டார் பெரியார்.

“இன்னிக்கு ஐயாவுக்குக் கூட்டம் இருக்கு ஞாபகப் படுத்திட்டுப் போகலாம்னு வந்தோம்.”

“எத்தனை மணிக்கு?”

“ஆறு மணிக்கு ஐயா!”

“அப்படித்தான் ஆறு மணிக்குன்னு சொல்வீங்க. ஏழுக்குத் தான் ஆரம்பிப்பீங்க. சரி, போங்க, வந்துடறேன்.”

அந்தத் தள்ளாத நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத வயோதிகத்திலும் அவர் கூட்டத்துக்குப் போவது அவசியம்தானா என்று என்னுள் ஓர் கேள்வி எழுந்தது.

“இத்தனை வருஷமாகத் தொடர்ந்து கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு இதில் அலுப்போ, சலிப்போ ஏற்படவில்லையா?” என்று கேட்டேன்.

“நல்லா கேட்டே போ! மொத மொதல்ல நான் சின்னப் பையனா இருந்தப்போ மொதக் கூட்டத்துக்கு எவ்வளவு உற்சாகத்தோட, ஆர்வத்தோட போனேனோ, அதில் கொஞ்சம் கூடக் குறையாமல் இன்னிக்கும் போய்க்கிட்டிருக்கேன்” என்றார்.

நான் அசந்து போனேன். நான் இன்றைக்கும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்த உணர்வை எனக்கு ஊட்டியவர் பெரியார் அவர்கள்தான். உழைப்பின் அருமையை எனக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பெரியாரை ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் நினைவு கூர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.