பாஞ்சாலி சபதம்/3. ஹஸ்தினாபுரம்

துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

3. ஹஸ்தினாபுரம்


அத்தின புரமுண் டாம்;-இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்;வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்;-எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;
நத்தியல் வாவிக ளாம்;-அங்கு;
நாடு மிரதிநிகர் தேவிக ளாம்.

அந்தணர் வீதிக ளாம்;-மறை
யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்;-மிகச்
சீர்பெருங் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்;-எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம்.

மெய்த்தவர் பலருண் டாம்;-வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;
உய்த்திடு சிவஞா னம்-கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்;
பொய்த்த விந்திரசா லம்-நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம்.

மாலைகள் புரண்டசை யும்-பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும்-நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,

காலையும் மாலையி லும்-பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர்,-கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார்.

ஆரிய வேல்மற வர்,-புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்,
சீரியல் மதிமுகத் தார்-மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளருந் தி-எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்-வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே

நல்லிசை முழுக்கங்க ளாம்;-பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங் கள்-அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்-கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்;
மல்லிசை போர்களுண் டாம்;-திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம்.

எண்ணரு கனிவகை யும்-இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்,
தண்ணுறுஞ் சாந்தங்க ளும்-மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகையும்-சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்-களி
வுகையும் கேளியும் ஓங்கின வே,

சிவனுடை நண்பன்என் பார்,-வட
திசைக்கதி பதியள கேசன் என் பார்;
அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர்
ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;
தவனுடை வணிகர்க ளும்-பல
தரனுடைத் தொழில்செயும் மாசன மும்
எவனுடைப் பயமு மிலா-தினிது
இருந்திடு தன்மையது எழில்நக ரே.