பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பயங்கர உண்மை

10. பயங்கர உண்மை

இராசசிம்மன் பதற்றத்தோடு ‘இப்போதே தாய்நாடு திரும்பப் போகிறேன்’ என்று கூறியதைக் கேட்டதுமே சக்கசேனாபதிக்கு நிலைமை புரிந்துவிட்டது. ‘தென்பாண்டி நாட்டில் பகைவர் படையெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது போலும்’ என்பதை அவரால் உணர முடிந்தது.

சேந்தன் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்த தன்னுடைய கப்பல் ஊழியர்களையும் மாலுமிகளையும் கூப்பிட்டு, “பாய் மரங்களைச் சரிசெய்து பாய்களை விரியுங்கள். இன்னும் சிறிது

நேரத்தில் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தயாராகட்டும்” என்று இரைந்து உத்தரவுகள் போட ஆரம்பித்தான். சக்கசேனாபதி இராசசிம்மனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார். “வந்ததும் வராததுமாக இப்படி உடனே திரும்பிப் போகிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். என் தாயையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டுமானால் நான் போய்த்தான் ஆகவேண்டும். நெருக்கடியான சமயம் இது. காசிப மன்னரிடம் சொல்லுங்கள். அவருடைய படை உதவியை தலைமை தாங்கி வந்தால்தான் எனக்கு நம்பிக்கை பிறக்கும். இருக்கிற நிலைமையைக் கேள்விப்பட்டால் நான் போவதற்குள்ளேயே அங்கே போர் மூண்டுவிடுமோ என்று பயமாயிருக்கிறது” என்று அவரிடம் உணர்ச்சிகரமாக வேண்டிக் கொண்டான் அவன். அதை கேட்டுக்கொண்டு அவர் கூறினார்-"இளவரசே! காசிப மன்னர்சுட நீங்கள் சொல்லாமலும் விடைபெற்றுக் கொள்ளாமலும் திரும்பிச் செல்வதை மன்னித்துவிடுவார். ஆனால் அந்தப் பெண் கனகமாலைதான் நான் திரும்பிச் சென்றதும், என்னைக் கேள்விகளை கேட்டுத் திணற அடிக்கப் போகிறாள். குறும்புக்காரப் பெண்ணாயிற்றே அவள்!”

“கனகமாலையிடமும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். பிழைத்துக் கிடந்தால் எல்லோரும் எல்லோரையும் மறுபடியும் சந்திப்போம்” என்று சொல்லும் போதே குரல் தழுதழுத்துக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது இராசசிம்மனுக்கு.

கப்பல் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக சேந்தன் வந்து தெரிவித்தான். சக்கசேனாபதி குமார பாண்டியனின் காதருகில் ஏதோ சொல்லிச் சற்று ஒதுக்குப் புறமாக ஒரு மூலைக்கு அழைத்துக்கொண்டு போனார். “இளவரசே! இவர்களோடு கப்பலில் வந்து தப்பி ஓடிப்போன வாலிபன் யாரென்று கொஞ்ச நேரத்துக்குமுன் இடையாற்று மங்கலத்து அம்மணியிடம் கேட்டேன். அது சேந்தனுக்குத்தான் தெரியுமென்று வெறுப்போடு பதில் சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதுபற்றிச் சேந்தனிடம் கேட்டீர்களா?” என்று கேட்ட அவருக்கு “நான் சேந்தனைக் கேட்ட முதல் கேள்வியே அதுதான். ஆனால்

அவன் அந்த வாலிபனைப் பற்றிய இரகசியத்தைக் கப்பலில் போகும்போது விரிவாகச் சொல்வதாகக் கூறிவிட்டான். அந்த வாலிபனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலைவிடக் காட்டில் இறந்த பெண்ணைப் பற்றியே எனக்கு அதிகம் கவலையாயிருக்கிறது!’ என்று குமாரபாண்டியன் பதில் சொன்னான்.

“சரி, விடை தாருங்கள். இன்னும் சில நாட்களில் படையோடு வந்து விழிஞத்தில் சந்திக்கிறேன்” என்று கைகூப்பி வணங்கிவிட்டுச் சக்கசேனாபதி கப்பலிலிருந்து கீழே இறங்கினார். கப்பலின் நங்கூரக் கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. குழல்வாய்மொழி கோபத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதை இராசசிம்மன் பார்த்துக்கொண்டான்.

“கோபப்படுகிறவர்களெல்லாம் அதை என் மேலேயே செலுத்துவதென்று வைத்துக்கொண்டால் நான் ஒருவன் என்ன செய்யமுடியும்? குழல்வாய்மொழியின் கோபமில்லாத முகத்தையும், சிரிப்பையும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் சென்றான் இராசசிம்மன். அதே நேரத்தில் கப்பல்துறையிலிருந்து மெதுவாக நகர்ந்தது.

எங்கோ பராக்கு பார்த்துக்கொண்டு நின்ற குழல்வாய் மொழி விருட்டென்று திரும்பினாள். அப்பப்பா! அந்த முகத்தில்தான் எவ்வளவு கோபம்?

‘மகாமண்டலேசுவரருடைய கண் பார்வைக்குத் தான் ஆற்றல் அதிகம். இப்போது பார்த்தால் அவருடைய பெண்ணின் கண்கள் அதைவிட அழுத்தமாகப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது:”

‘நினைப்பீர்கள் ! நினைப்பீர்கள் ! ஏன் நினைக்க மாட்டீர்கள்? துறவியைப்போல் வேடம் போட்டு வேண்டியதைத் திருடிக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போகிற இளவரசருக்கு எதுவேண்டுமானாலும் நினைக்க முடியுமே? ஆண்களுக்கே வஞ்சகக் குணம் அதிகம். நெஞ்சு அழுத்தம் அதிகம். இல்லாவிட்டால் அந்தக் குட்டை மனிதர் என்னுடைய

அறையிலேயே என்னை நுழையவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டு, உங்களோடு இரகசியம் பேசுவதற்குத் துணிய முடியுமா? திடீரென்று இரகசிய விஷயங்களை அறியத் தகுதியற்ற மூன்றாவது பேராக மாறிவிட்டேன் போலிருக்கிறது நான்! அப்படித்தானே?” - - -

“சேந்தன் செய்ததில் தவறென்ன குழல்வாய்மொழி! அரசாங்கக் காரியங்களைப் பேசும்போது பெண்கள் கூட இருப்பது நல்லதில்லைதானே?”

“அப்படியானால் என் தந்தை சேந்தனை மட்டுமே தனியாக இந்தக் கப்பலில் அனுப்பியிருக்கலாமே!”

“உண்ம்ைதான்! நீ ஏன் வீணாக அலையவேண்டும்?” என்று இராசசிம்மன் சொன்னதும் குழல்வாய்மொழியின் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே! குங்குமச் சிவப்பில் திளைத்த அந்த முகம் சினத்தின் எல்லை இதுதான் என்று சொல்வது போலிருந்தது. -

“குழல்வாய்மொழி! இப்போது உன்னுடைய முகம் இந்தச் சங்கின் நிறத்தைப்போல் அழகாக இருக்கிறது” என்று வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டே, தன் பட்டுப் பையிலிருந்து வலம்புரிச்சங்கை வெளியே எடுத்தான் குமார பாண்டியன்.

அந்தச் சங்கை அவனுடைய கையில் பார்த்ததும் அவள் முகத்தில் சினத்தின் சுவடு குன்றி வியப்பின் சாயல் படர்ந்தது. செம்பவழத் தீவில் வரும்போது சந்தித்த படகுக்காரப்பெண் கூறியதை நினைத்துக்கொண்டாள் அவள். அப்போது சேந்தனும் அங்கே வந்தான்.

“ஆ! செம்பவழத் தீவில் அந்தப் பெண் கூறியபோதே நினைத்தேன். இதை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியவர் நீங்களாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகவே இருக்கிறது” என்று சேந்தன் கூறினான்.

இராசசிம்மனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அவர்கள் வருகிற வழியில் தாங்கள் செம்பவழத் தீவில் இறங்கியதையும், அந்தப் பெண்ணைச் சந்தித்துவிட்டு வந்ததையும் கூறினார்கள்.

“அவள் ஒர் அபூர்வமான பெண் ! ஒருவிதத்தில் நான் இப்போது உயிருடன் இருப்பதற்குக்கூட அவள்தான் காரணம். அவளை என்னால் மறக்கவே முடியாது” என்று குமார பாண்டியன் மதிவதனியைப் பற்றி உருக்கமாகப் புனைந்து சொன்னபோது குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்து கண்கள் சுருங்கின.

‘ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணைப்பற்றி மனம் விட்டுப் புகழ்ந்து பேசுவதில் எவ்வளவு இடர்ப்பாடு இருக்கிறது? என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு வாய்த் துடிப்பை அடக்கினான் இராசசிம்மன். -

“குமாரபாண்டியருக்கு என்ன? எல்லாப் பெண்களும் அவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்ய முன் வருகிறார்கள்! தெரிந்தும், தெரியாமலும், சுய உருவிலும் மாறு வேடத்திலும் அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். பெண்களின் உதவியை அமோகமாகப் பெறுகின்ற இந்த ஓர் அம்சத்தில் அவர் கொடுத்து வைத்தவர்தான்” என்று கண்களிலும், இதழ்களிலும் குறும்பு மிளிரக் குத்தலாகச் சொன்னாள் குழல்வாய்மொழி.

“எந்தப் பெண்ணும் நீ சொல்லுகிற மாதிரி மாறுவேடம் போட்டுக் கொண்டு எனக்கு உதவி செய்ய இதுவரை வரவில்லையே, குழல்வாய்மொழி! நீ உள்படச் சுய உருவுடன் தான் எனக்கு உதவி செய்திருக்கிறாய்!” என்று நகைத்தவாறே அவளுக்குப் பதில் சொன்னான்.

“ஏன் தங்களுக்கு மாறுவேடத்தில் அதிகப் பற்று உண்டென்று சமீபகாலத்து நிகழ்ச்சிகளால் தெரிய வருகிறதே” என்றான் சேந்தன். அவன் சொற்களை இடைமறித்துக் குழல்வாய்மொழி, “ஐயா, தென்பாண்டி நாட்டு இளவரசே! கொஞ்சம் நான் சொல்கிறபடி கேட்டு என்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வந்தீர்களானால் உங்களை ஆண்வேடத்தோடு சந்திக்க வருகிற பெண்களும் உண்டு என்பதற்குச் சரியானதொரு அடையாளம் என்னால் காட்டமுடியும் என்று இராசசிம்மனை அறைகூவி அழைத்தாள். அவள் ஏதோ விளையாட்டுத்தனமான பொய் கோபத்தோடு அப்படிச் சொல்கிறாள் என்று

எண்ணிக்கொண்டு “ஆகா! நான் தாராளமாக உன்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வரத் தயாராயிருக்கிறேன்! கப்பல் விழிஞத்தை அடைகிற வரையில் நீயும் சேந்தனும் எதை எதைச் சொல்கிறீர்களோ அதையெல்லாம் அப்படியே கேட்டு விடுவதென்று இருக்கிறேன். விழிஞத்தை அடைந்து அரண்மனைக்குப் போன பின்புதான் என் தாயாரும் மகாமண்டலேசுவரரும் சொல்கிற படி கேட்கவேண்டும் “ என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கித் தளத்துக்குப் போவதற்காக நடந்தான் இராசசிம்மன். குழல்வாய்மொழியும், சேந்தனும் அவன் பின்னால் சென்றார்கள்.

“அம்மணி! சற்றுமுன் குமாரபாண்டியரிடம் தங்கள் தந்தையின் அவசரச் செய்தியைக் கூறுவதற்காக அழைத்துப் போனபோது தங்களை அறைக்குள் விடாமல் கதவைத் தாழிட்டதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை அவமானப் படுத்த வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. தங்கள் தந்தையின் கட்டளைக்கு மரியாதை செய்யவே அப்படிச் செய்தேன். தாம் கூறியனுப்பிய செய்தியை இளவரசரிடம் நான் சொல்லும்போது எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் உடனிருக்கலாகாதென்பது மகாமண்டலேசுவரரின் கட்டளை” என்று போகும்போது குழல்வாய்மொழியின் அருகில் நடந்து கொண்டே கூறினான் சேந்தன்.

குழல்வாய்மொழி அதற்கு ஒன்றும் பதிலே சொல்ல வில்லை. வேகமாகத் தன் அறைக்குள் போய் ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடிய அங்கி, தலைப்பாகை முதலிய சில உடைகளை எடுத்துக்கொண்டு வந்து குமாரபாண்டியனுக்கு முன்னால் போட்டாள். சேந்தனும் அருகில் நின்றான்.

அவற்றைப் பார்த்துவிட்டு, இவை யாருடையவை?” என்று கேட்டான் இராசசிம்மன்.

“எங்கள் கப்பலில் எங்களுக்குத் தெரியாமல் மாறுவேடம் போட்டுக்கொண்டு ஏறிக் கடைசியில் எங்களையே ஏமாற்றி விட்டுப்போன ஒரு நயவஞ்சகப் பெண்ணினுடையவை இவை. அந்தப் பெண் இந்த வேடத்தில் உங்களைத்தான் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள். இதற்குள் உங்களைச் சந்தித்தாலும்

சந்தித்திருப்பாள். என் வாயில் துணியைத் திணித்து என்னைக் கட்டிப் போட்டுத் தப்பிப் போகும்போது அந்த நன்றி கெட்டவள் உங்களைச் சந்திப்பதற்குப் போவதாகத் தான் கூறினாள்” என்று சினம் பொங்கப் படபடப்போடு வார்த்தைகளை இறைத்தாள் மகாமண்டலேசுவரரின் பெண். -

“குமாரபாண்டியரே! தப்பிப்போன இளைஞனைப் பற்றி என்னிடம் தனியாகக் கேட்டீர்களல்லவா? அதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இந்த உடைகளில்தான் அந்த இரகசியம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சேந்தனும் சேர்ந்துகொண்டு சிரித்தான்.

“விளங்கும்படியாகத்தான் சொல்லுங்களேன்! நீங்கள் இரண்டு பேருமாக என் சிந்தனையைக் குழப்புகிறீர்களே? இந்த உடைகளை அணிந்திருந்தது யார்? இப்போது எங்கே?’ என்று கேட்டான் இராசசிம்மன்,

“வேறு யாராயிருக்க முடியும்? தீரச் செயல்களையும் முரட்டுக்காரியங்களையும் வீரர்களின் உடன்பிறந்தவர்களால் தானே செய்யமுடியும்? தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் அருமைத் தங்கை பகவதிதான் இந்த

வேடத்தில் வந்து, இந்தக் கப்பலில் கூத்தன் என்று பெயர் பூண்டு

நடமாடினாள். கப்பல் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களிடம் பிடிபட்டதும் வேடத்தைக் கலைத்துவிட்டுத் தப்பி விட்டாள். அந்த வேடத்தைக் கலைத்த இரகசியம் எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.” “ . .

இவ்வாறு சேந்தன் அப்போது சொல்லிக்கொண்டே வந்தபோது குமாரபாண்டியனின் வாயிலிருந்து சோகக்குரல் ஒன்று எழுந்து ஒலித்தது. பொறியற்ற பாவைபோல் சோர்ந்து கப்பலின் தளத்தில் வீழ்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன். சேந்தனும் குழல்வாய் மொழியும் இராசசிம்மனின் நிலையைக் கண்டு பதறிப் போனார்கள்.

“என்ன? அந்தப் பெண் உங்களையும் சந்தித்து ஏதாவது ஏமாற்றிவிட்டாளா? ஏன் இப்படிச் சோர்ந்துபோய்த் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டிர்கள்? அல்லது கப்பல் செல்கிற வேகத்தில் மயக்கம் உண்டாகிறதா?’ என்று சேந்தன் கேட்டான்.

“ஐயோ! இதென்ன? இப்படி அல்லித் தண்டு மாதிரித் துவண்டு விழுகிறீர்களே? உங்கள் உடம்புக்கு இருந்தாற் போல் இருந்து என்ன வந்துவிட்டது?” என்று கூறிக் கொண்டே கீழே குனிந்து ஆதரவாகக் குமாரபாண்டியனின் உடம்பைத் தாங்கிக் கொண்டாள் குழல்வாய்மொழி.

குமாரபாண்டியன் விழிகள் இமையாமல் சூன்யத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே தலையில் வைத்த கைகளை எடுக்காமல் நெடுநேரம் கிடந்தான்.

பின்பு நிதானமாக வாய் திறந்து அவர்கள் இருவரையும் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னான்: “தமனன் தோட்டத்துக்கும் பொலன்னறுவைக்கும் இடையிலுள்ள காட்டில் மரணமென்று அந்தப் பெண்ணுக்கு விதி இருந்தது போலிருக்கிறது. பாவம்! இங்கிருந்து தப்பியோடி என்னைச் சந்திக்க வந்த வழியில் இயற்கையின் கூத்துக்குப் பலியாகி இறந்துபோய் விட்டாள் அவள்!”