பாம்பாட்டிச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்

  • பக்கம் 179 - 197

பாம்பாட்டிச்சித்தர்

ஆடுபாம்பே தொகு

1 தொகு

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே சிவன்

சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே

ஆடுபாம்பே தெளிந்து ஆடுபாம்பே சிவன்

அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே (1)

2 தொகு

நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே

நித்தியம்என் றேபெரிய முத்தியென்றே

பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே

பன்னிப்பன்னிப்பரவி நின்று ஆடுபாம்பே (2)

3 தொகு

பொன்னில் ஒளி போலவெங்கும் பூரணமதாய்

பூவின் மணம் போலத் தங்கும் பொற்புடைய தாய்

மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்

வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே (3)

4 தொகு

எள்ளில் எண்ணெய் போல வுயிர் எங்கும் நிறைந்த

ஈசன் பத வாசமலர் எண்ணியெண்ணியே

உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே

ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே (4)

5 தொகு

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை

அகலாம லேநினைத்தே அன்புடன் பணிந்து

எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி மேத்தியே

ஏகமன மாகநாடி ஆடுபாம்பே (5)

6 தொகு

சோதிமயமான பரிசு த்தவத்துவைத்

தொழுதழு தலற்றித் தொந் தோம்தோம் எனவே

நீதி தவறா வழியில் நின்று நிலையாய்

நினைந்து நினைந்துருகி ஆடுபாம்பே (6)

7 தொகு

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்

திருவாயும் குருவாயும் சீவனாயும்

செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே (7)

8 தொகு

சுட்டிக் காட்ட ஒண்ணாதபாழ்ச் சூனியம் தன்னை

சூட்சமதியால் அறிந்து தோஷம் அறவே

எட்டிப்பிடித்தோ மென்றானந்த மாகப்பை

எடுத்து விரித்து நின்று ஆடுபாம்பே (8)

9 தொகு

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்

இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்

அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற

ஆனந்த வெள்ளங்கண்டு ஆடுபாம்பே (9)

குரு வணக்கம் தொகு

10 தொகு

காற்று உடன்பொருள் ஆவி தத்தமாகவே

தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்

போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்

புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே (10)

11 தொகு

பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்

புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்

மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்

மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே (11)

12 தொகு

வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த

மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்

போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்

பூரண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே (12)

13 தொகு

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை

உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்

கள்ள மனத்தன்னைத் தள்ளிக் கண்டுகொண்டு அன்பாய்க்

களித்துக் களித்து நின்று ஆடு பாம்பே (13)

14 தொகு

அங்கையிற் கண்ணாடிபோல ஆகி வத்துவை

அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்

சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே

தமனியப் படம் எடுத்து ஆடு பாம்பே (14)

15 தொகு

காயம் நிலைஅழிகையைக் கண்டு கொண்டு பின்

கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்

தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின்

துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே (15)

16 தொகு

கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய

குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்

வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும்

மெய்க்குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே (16)

17 தொகு

அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்

அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்

வட்டமிட்டு வலம் வரும் வல்லகுருவின்

மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே (17)

18 தொகு

கற்ப காலம் கடந்தாதி கர்த்தா வோடும்

கடமழி யாது வாழுங் காரணக்குரு

பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து

பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே (18)

19 தொகு

வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்

வல்லுடம்புக் கொரு குறை வாய்த்திடாது

மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின்

மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே (19)

பாம்பினது சிறப்பு தொகு

20 தொகு

நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே

பாதலத்திற் குடி புகும் பைகொள் பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே (20)

21 தொகு

வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே

மண்டல மிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே

தலையெடுத்தே நீ விளையாடு பாம்பே (21)

22 தொகு

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்

கூறுந்திரு மாலுக்குக் குடையுமானாய்

கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்

கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே (22)

23 தொகு

மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்

மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப்பாயானாய்

கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்

கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடுபாம்பே (23)

24 தொகு

சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்

சங்கரனுக்கு ஆபரணந் தானுமாகினாய்

மந்திரத்துக்குக் கடங்கினாய் மண்டலமிட்டாய்

வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே (24)

சித்தர் வல்லபம் தொகு

25 தொகு

எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்

கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்

கடு விஷந் தன்னைக் கக்கி ஆடு பாம்பே (25)

26 தொகு

ஆதிசேடன் ஆயினுமெம் மங்கையினாலே

ஆட்டி விடுவோமெங்கள் ஆக்கினைக்குள்ளே

நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்

நின்ற நிலை தவறாமல் ஆடுபாம்பே (26)

27 தொகு

தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்குவோம்

துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்

ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும்ஆகச் செய்குவோம்

ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே (27)

28 தொகு

எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்

ஏழு கடலையுங் குடித்து ஏப்பமிடுவோம்

மட்டுப் படா மணலையும் மதித்து விடுவோம்

மகாராசன் முன்பு நீ நின்று ஆடுபாம்பே (28)

29 தொகு

மண்டலமுற்று மெங்கையால் மறைத்து விடுவோம்

வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்

தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்

தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடு பாம்பே (29)

30 தொகு

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே (30)

31 தொகு

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்

செங்கதிரைத் தன்கதிராய்ச் செய்து விடுவோம்

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்

எங்கள் வல்ல பங்கண்டு நீ ஆடுபாம்பே (31)

32 தொகு

வேதன் செய்த சிருட்டிகள் போல் வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்கை யாம்இதுவென்று ஆடுபாம்பே (32)

33 தொகு

அறுபத்து நாலு கலை யாவும் அறிந்தோம்

அதற்குமேல் ஒருகலையான தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே (33)

34 தொகு

சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென்றஃ ஆடுபாம்பே (34)

35 தொகு

வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி

மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே

தேசுலவு தக்கனைத்தன் திக்கினில் சேர்த்துச்

செய்யபது மனைக்கொள்ளும் சித்தனாரே (35)

36 தொகு

ஆனந்தனை யொருபக்கமாக நிறுத்தி

அதன் பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்

கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்

கடுஞ்சங்க பாலனைத்தான் சித்தனாரே (36)

37 தொகு

அட்டதிக்குஞ் சக்கரங்களாகக் கீறி

அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்

திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்

சித்தந்தடு மாறாதீர் சித்தனாரே (37)

38 தொகு

அட்டதிக்குஞ் சக்கரங்கள் அமைத்து விட்டோம்

அவ்வவற்றில் சக்கரங்கள் அமைத்து விட்டோம்

எட்டுநாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்

இனியென்ன செய்வம் சொல்லும் சித்தனாரே (38)

39 தொகு

நடுவாக ஆதிசேடன் தன்னை நாட்டும்

நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்

கடுவிடங் கக்க வேயக் கட்செவிகளைக்

கையிலெடுத் தாடுங்கள் சித்தனாரே (39)

பொருளாசை விலக்கம் தொகு

40 தொகு

நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்

நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ

கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ

கூத்தன் பதங் குறித்துநின்று ஆடுபாம்பே (40)

41 தொகு

யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்

யமன்வரும் போது துணை யாமோ அறிவாய்

ஞானஞ்சற்றும் இல்லாத நாய்கட் குப்புத்தி

நாடிவரும்படி நீ நின்று ஆடுபாம்பே (41)

42 தொகு

மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்

ஆணிப்பொன்முத் தாரம் அப்பொன் அந்தக் கடகம்

அழிவான பொருளென நின்று ஆடுபாம்பே (42)

43 தொகு

மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்

மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை

கூடவாராவென்று அந்தக் கொள்கை அறிந்தோர்

குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே (43)

44 தொகு

மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்

மறலிதான் வருகையில் வாரிச்செல்வரோ

அலையாமல் அகத்தினை அத்தன்பால் வைத்தோர்

அழியார்என் றேநீ துணிந்து ஆடுபாம்பே

45 தொகு

பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்

பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ

மஞ்சள்மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்

வருமென்றஃ தெளிந்து நின்று ஆடுபாம்பே

46 தொகு

முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே

47 தொகு

வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்

வண்கவிதை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்

திண்ணமுடன் யம்புரஞ் செல்லுங் காலத்தில்

சேரவர மாட்டாயென்று ஆடுபாம்பே

48 தொகு

மக்கள் பெண்டிர் சுற்றமருமக்கள் மற்றவர்

மாளும்போதுகூட அவர் மாள்வதில்லாயே

தக்கவுலகனைத்தையும் தந்த கர்த்தனைத் :

தாவித்தாவித் துதித்துநின்று ஆடுபாம்பே

49 தொகு

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்

காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்

மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்

மெய்யன்பதம் நாடுவாரென்று ஆடுபாம்பே

50 தொகு

பெண்ணாசை விலக்கம் தொகு

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்

ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்

உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே

51 தொகு

செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்

சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்

குண்டு கட்டெ றுமையேறுங் கூற்றுப் பருந்தைக்

கொன்று தின்றுவிட்டோம் நாம் என்று ஆடு பாம்பே

52 தொகு

வட்டமுலையென்று மிக வற்றுந்தோலை

மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்

கெட்ட நாற்ற முள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார்

கெடுவர் என்றே நீர்துணிந்து ஆடுபாம்பே

53 தொகு

மலஞ்சொரி கண்ணைவடி வாளுக்கொப்பாக

வருணித்துச் சொல்வார் மதிவன்மை இல்லாதார்

குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்

கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே

54 தொகு

சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்

சிப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்

நெக்கு நெக்கு உருகிப்பெண்ணை நேஞ்சில் நினைப்பார்

நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே

55 தொகு

நாறிவரும் எச்சில்தனை நல்லமுதென்றும்

நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழ்என்றும்

கூறுவார்கள் புத்தியில்லாக்கூகை மாந்தர்கள்

கோன் நிலையை அறியார் என்று ஆடுபாம்பே

56 தொகு

மயில்என்றும் குயில்என்றும் மாணிக்கம் என்றும்

மானேயென்றும் தேனேயென்றும் வான் அமுதென்றும்

ஒயிலான வன்னமயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்துவிட்டு ஆடுபாம்பே

57 தொகு

மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக்கம் என்றும்

மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகையென்றும்

கன்னற்கட்டி யென்றுஞ் சீனிக் கற்கண்டு என்றும்

கழறாமல் கடிந்தோம் என்று ஆடுபாம்பே

58 தொகு

பூவையென்றும் பாவையென்றும் பொன்னேயென்றும்

பூந்திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்

கோவையென்றுங் கோதையென்றுங் கோகிலம் என்றும்

கூறாமல் து றந்தோம்நாம் என்று ஆடுபாம்பே

59 தொகு

மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்

மல்கும்புழுக் கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்

சலக்குழிக்குள்ளே நாற்றஞ்சார்ந்த சேறென்றும்

தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடுபாம்பே

60 தொகு

சரீரத்தின் குணம் தொகு

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிர்ப்பு னலினிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே

61 தொகு

இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை

அரைக காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே

62 தொகு

பரியாசம் போலவே கடித்த பாம்பு

பலபேர் அறியவே மெத்த வீங்கிப்

பரியாரம் ஒருமாது பார்த்த போது

பையோடே கழன்றதென்று ஆடுபாம்பே

63 தொகு

சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமும்

சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்

நாயும் நரியும் பெரிய பேயுங்கழுகும்

நமதென்றே தின்றிடும் என்று ஆடுபாம்பே

64 தொகு

நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல

நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே

பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்

பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே

65 தொகு

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பலந்தி யாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே

66 தொகு

காய்த்த மரம் அதுமிக்க கல்லடி படும்

கன்ம வினை கொண்ட காயம் கண்டனை பெறும்

வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே

வந்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே

67 தொகு

பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி

பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண்டாச்சே

ஈசன் நிலை அறியார்க்கு இந்தத் துருத்தி

எரிமண்ணிற்கு இரையாம் என்று ஆடுபாம்பே

68 தொகு

மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து

வளமான சீவன் என்னுஞ் சூத்திரம் மாட்டித்

திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே

தேகம் விழும் என்று தெளிந்து ஆடுபாம்பே

69 தொகு

தசநாடி தசவாயு சத்த தாது

சார்ந்தமரக் கப்பல் அது தத்திவிழுமே

இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்

எந்நாளும் ஓட்டத் துணிந்து ஆடுபாம்பே

70 தொகு

அகப்பற்று நீக்கல் தொகு

தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத

தன்மைபோல சகத்தாசை தள்ளி விட்டெங்கும்

தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்

தொழுது தொழுது தொழுது ஆடுபாம்பே

71 தொகு

கள்ளங்கொலை காமமாதி கண்டித்தவெல்லாம்

கட்டறுத்து விட்டு ஞானக் கண்ணைத் திறந்து

தெள்ளிதான வெட்டவெளி சிற் சொரூபத்தைத்

தேர்ந்து பார்த்துச் சிந்தை தெளிந்து ஆடுபாம்பே

72 தொகு

சொல்லும்புளி யம் பழத்தின் தோடு போலவே

சுற்றத்திருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று

நில்லுமனமே நீபர நின்மலத்திலே

நின்றுணைதான் வெறும் பாழென்று ஆடுபாம்பே

73 தொகு

சேற்றில் திரி பிள்ளைப் பூச்சி சேற்றை நீக்கல்போல்

தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்டபின்

சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே

தானடக்க வேணுமென்று ஆடு பாம்பே

74 தொகு

எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தம் இல்லா வாறுபோல்

எப்போதும் இப்புவியில் எய்த வேண்டும்

கண்ணுக்குக் கண்ணானவொளி கண்டு கொள்ளவே

கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடுபாம்பே

75 தொகு

கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்

கண்களுக்கு சுத்தமான காட்சிபோலவே

சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்

சீர்பாதங் காணத் தெளிந்து ஆடுபாமனே

76 தொகு

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள்யுக்தி அங்குசத்தால் கொன்று விட்டோங்

தீபமென்னுஞ் சிற் சொரூபச் செய்ய பொருளைச்

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடு பாம்பே

77 தொகு

நித்யமென்னு மலையில் நின்று கொண்டோம் யாம்

நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்

சத்தியமாய் எங்கள் கடந்தான் அழியாதே

சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே

78 தொகு

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச்

சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித்

தெளிவிடம் சாரிவிட்டு ஆடுபாம்பே

79 தொகு

ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே

ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே

காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்

காலாகாலங் கடந்தோம் என்று ஆடுபாம்பே

80 தொகு

காலன் எனுங் கொடிதான கடும்ப கையை நாம்

கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்

தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்

தற்பரங் கண்டோம் என்று ஆடுபாம்பே

81 தொகு

தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து

திகையாமல் சிற்சொரூப தெரிசனைக்கண்டு

வானிற் பறந் திடச்சூத வான் மணி தீர் ந்து

வாயிற் போட்டேக நீ நின்று ஆடுபாம்பே

82 தொகு

தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியுங் கண்டேன்

சுத்த வெளிக்குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்

தாக்கிய சிரசின் மேல் தைத்த பாதம்

சற்குருவின் பாதம் என்று ஆடுபாம்பே

83 தொகு

ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே

அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய்

வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து

வாங்கியே தூங்கிநின்று ஆடுபாம்பே

84 தொகு

நாலு தெருவினிலே நாலு கம்பம்

நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம்

போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே

பூமாலை சூடியேநின்று ஆடுபாம்பே

85 தொகு

ஆழிபெயர்ந்தாலும் மேருமட்டே அலையும்

அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக்கால

ஊழிபெயர்ந்தாலும் மதி உண்மைப் படிக்கே

உறுதி பெயராது நின்று ஆடுபாம்பே

86 தொகு

வாயுவினை இரையாக வாங்கி உண்டே

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே

தேயுபிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில்

திகைப்புறச் சேர்ந்துநின்று ஆடு பாம்பே

87 தொகு

மாசில்கதி வளையிலே மண்டலம் இட்டே

மதியான பெரும்பட மடலை விரித்தே

ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை

அடுத்தடுத்தே துதித்து ஆடுபாம்பே

88 தொகு

காடுமலை ந்திபதி காசி முதலாய்க்

கால்கடுக்க ஓடிற்பலன் காண லாகுமோ

வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே

வேதாந்தத் துறையில் நின்று ஆடுபாம்பே

89 தொகு

எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி

எய்துவது தொல்லுலகில் இல்லையெனவே

கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்

கண்டு தொழுதே களித்து ஆடுபாம்பே

90 தொகு

சூரியனைக் கண்டபனி தூர ஓடல் போல்

சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்

ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்

அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே

91 தொகு

காந்தம்வலி இரும்பு போல் காசில் மனத்தைக்

காட்சியான வத்துவுடன் கலக்கச் சேர்த்துக்

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்

சலியாமல் தொடர்ந்து நின்று ஆடுபாம்பே

92 தொகு

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உண்ணர்ச்சி

உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே

93 தொகு

திரளான போரில் ஊசி தேடல் போல்முத்தி

சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்

அருளான மூலகுரு ஐயர் செயலால்

ஆனந்தம் கண்டோம் என்று ஆடுபாம்பே

94 தொகு

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரிந்துங் கதி எய்தல் இலையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே

95 தொகு

தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னை யொரு கடவுளைப் பேண நினையா

பேரொளியைப் பேணுவார் என்று ஆடுபாம்பே

96 தொகு

பாலிற்சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்

பற்றுப்பொன் பற்றவைத்த பான்மைபோலே

காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு

களித்துக் களித்துநின்று ஆடுபாம்பே

97 தொகு

தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்

தேகபந்தம் கொண்டனம் இத்தேச வாழ்வினை

ஒக்காளமென்று எண்ணிமிகு ஒகையுடன் நீ

உள்ளம் தெளிந்து நின்று ஆடுபாம்பே

98 தொகு

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம்விதமானவான வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே

99 தொகு

சமயபேதம் பலவான சாதி பேதங்கள்

சசத்தோர்க்கே அல்லாது சற் சாதுக் களுக்கோ

சிமயத்தி லேறியபேர் சித்தம் மாறுமோ

சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே

100 தொகு

பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ

பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ

ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை

அடையலாம் என்று துணிந்து ஆடுபாம்பே

101 தொகு

மூலவேர் அறிந்து கொண்டால் மூன்று உலகமும்

முன்பாகவே கண்டு நித்யமுத்தி சேரலாம்

சாலவேர் அறிந்ததாலே தான் பயன் உண்டோ

சகத்தைப்பொய் யென்று தெளிந்து ஆடுபாம்பே

102 தொகு

சகத்தனாதி யென்றிடாது தான் அனாதியார்

சமைந்ததென்று உரைப்பார்கள் சத்தை அறியார்

மகத்துவ நிலைகற்பவன்மை யல்லாது

மற்றும் வன்மை இல்லையே என்று ஆடுபாம்பே

103 தொகு

ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்

அண்டம் எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கிவளர் காரணச் சித்தன்

கண்ணுள் ஒளி யாயினான் என்று ஆடுபாம்பே

104 தொகு

நாற்பத்து முக்கோண நிலை நாப்பணதாக

நாடும் அக்கரச் சொரூப நாயகன் தனை

மேற்படுத்திக் கொண்டால் அந்த மேலுலகெலாம்

மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடுபாம்பே

105 தொகு

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்

கூத்தாடிக் கூத்தாடியே நீ ஆடுபாம்பே

106 தொகு

ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்

அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு

வேறுபட்டால் அவன் தனை மீட்டல் அரிதே

மேவிமுன்னே விடாது கொண்டு ஆடுபாம்பே

107 தொகு

எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என்

ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணா விடிலே

பண்ணரிய தவப்பயன்பத்தி இல்லையேல்

பாழ்படும் என்று துணிந்து ஆடுபாம்பே

108 தொகு

எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என்

எங்கள் ஆதி பாதாம்புயம் எண்ணாக் காலையில்

இவ்வுலக வாழ்வு தானும் இன்றே அறுமென்று

எண்ணிக் கர்த்தன் அடிநினைந்து ஆடு பாம்பே

109 தொகு

மணக்கோலங் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே

மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்

பிணக்கோலம் கண்டுபின்னுந் துறவா வீட்டில்

பிறப்புக்கே துணையாம் என்று ஆடுபாம்பே

110 தொகு

பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்

பெருமருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன்கேளாய்

திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்

திறந்திடும் வகையறிந்து ஆடுபாம்பே

111 தொகு

இறந்தவர் ஐவர்அவர் இட்டமானவர்

எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்குஞ்சொல்

மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்

வகையறிந்திடவே நின்று ஆடுபாம்பே

112 தொகு

ஆகார முதலிலே பாம்ப தாக

ஆனந்த வயலிலே படம் விரித்தே

ஊகார முதலிலே யொத்து ஒடுங்கி

ஓடி வகாரத்தின் நாவை நீட்டிச்

சிகாரங் கிடந்ததோர் மந்திரத்தைச் :

சித்தப் பிடாரனார் போதஞ் செய்ய

மாகாரப் பிறப்பையும் வேர் அறுத்து

மாயபந்தம் கடந்தோம் என்று ஆடு பாம்பே

113 தொகு

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்

அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி

அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

இந்த மருந்தினைத் தின்பீராகில்

இனிப் பிறப்பு இல்லையென்று ஆடுபாம்பே

114 தொகு

களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே

கனமான பாய்மரங் காண நாட்டி

அளிபுலந் தன்னையே சுக்கானாக்கி

அறிவென்னும் ஆதாரச் சீனி தூக்கி

வெளியென்னும் வட்டத்தே யுள்ளடக்கி

வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்

தெளிவுறு ஞானியார் ஓட்டுங் கப்பல்

சீர்பாதஞ் சேர்ந்தது என்று ஆடு பாம்பே

115 தொகு

உள்ளத்துக் குள்ளேயே உணர வேண்டும்

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்

வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்

கள்ளப் புலனைக் கடிந்து விட்டு

கண்ணுக்கு மூக்கு மேற் காண நின்று

தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்

சிர்பாதம் கண்டோம் என்று ஆடு பாம்பே

116 தொகு

ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே

சாங்காலம் இல்லாமல் தாணுவோடே

சட்டதிட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்

தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து

தொந்தோம் தொந்தோம் என்று ஆடு பாம்பே

117 தொகு

விரகக் குடத்திலே பாம்படைப்போம்

வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்

கரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்

காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்

துரகந் தனிலேறித் தொல் உலகெங்கும்

சுற்றி வலம் வந்து நித்ய சூட்சங் காண்டும்

உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்போம்

ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடு பாம்பே

118 தொகு

காயக் குடத்திலே நின்ற பாம்பைக்

கருணைக் கடலிலே தியங்கவிட்டு

நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி

நித்தியமான வத்துவை நிலைக்க நாடி

மாயப் பெருவெளி தன்னில் ஏறி

மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி

ஆய்த்துறை கடந்தப் பாற்பாழின்

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே

119 தொகு

மூலத் தலத்திலே நின்ற கருத்தை

முற்றுஞ் சுழுமுனை தன்னில் ஊடே

மேலத் தலத்திலே விந்து வட்டம்

வேலை வழியிலே மேவி வாழும்

பாலத் திருத்தாயக் கருணையதனால்

பரகதி ஞான சொரூபமாகி

ஆலச் சயனத்து மாலுடன் நின்றே

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே

120 தொகு

புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும்

புரவி யெனும் மனத்தை ஒருமைப் படுத்தி

மலபந்த வுலகங் கடந்ததாலே

மன்னுகுரு பாதத்தின் நிலையைநாடித்

தலம் ஐந்து பூலோகங் கடந்ததாலே

சந்திர மண்டிலமும் கடந்த தாகும்

அலமந்து பூலோகக் கடலை நீக்கி

ஆனந்தமாகி நின்று ஆடு பாம்பே

121 தொகு

குருவென்னும் ஆசானின் உருவெடுத்துக்

குறியான ஞானந்துப் பாக்கி யாக்கி

அருளென்னும் அருளையே உண்டாக்கி

ஆனந்த மாகவே அதைக் கடந்தே

மருளென்னும் மாதர்மன் நெறியைத் தொட்டு

வாங்காமல் எரிந்திட நெட்டை யிட்டுப்

பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே

பற்றானைப் பற்றிநின்று ஆடுபாம்பே

122 தொகு

கன்னான் குகையிலே கான்மறிப்போம்

கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்

சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம்

சுருதி யருங்கலவி ஒப்பஞ் செய்வோம்

மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம்

மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்

பன்னாதே பன்னாதே சும்மா விருந்து

பராபரஞ் சேர்ந்தோம் என்று ஆடுபாம்பே

123 தொகு

சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்

வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்

வேண்டாத மனையினில் உறவு செய்வோம்

சோதித் துலாவியே தூங்கி விடுவோம்

சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்

ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்

அறியார்கள் இதையென்று ஆடு பாம்பே

124 தொகு

நெட்டெழுத்து அதனிலே நிலைபி டித்து

நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி

விட்டு அவ் எழுத்திலே படம் விரித்து

விண்ணின் வழியிலே விளையாடி

பட்ட எழுத்தையும் பதித்திருப்போம்

பன்னிரண் டாமெழுத்தில் பன்னிக் கூடித்

திட்டமுடன் எமக்கருள் தேசிகனார் தம்

சீர்பாதஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே

125 தொகு

ஊசிதுளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம்

உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம்

மாசுள்ள பிறவியை மறந்திருப்போம்

மனமொத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்

மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்

மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்

பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்

பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடு பாம்பே

126 தொகு

ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்

அக்கினிக் கோட்டைமேல் ஏறிப் பார்ப்போம்

மாணிக்கத் தூணின் மேல் விட்டே ஆட்டுவோம்

மனம் வாக்குக் காயத்தை இரைகொ டுப்போம்

நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்

நமனற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்

ஏணிப் படிவழிகண்டு ஏறி விடுவோம்

யாரும் இதை அறியார் என்றஃ ஆடு பாம்பே

127 தொகு

வடக்குங் கிழக்குமாக நூலை இழைப்போம்

மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம்

நடவா வழியினிலே புடைவை நெய்வோம்

குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்

கொய்ததை எங்குமே விற்று விடுவோம்

அடக்கியே ஏகத்துள்ளே வைக்கவும் வல்லோம்

ஆதிபதங் கண்டோம் என்று ஆடு பாம்பே

128 தொகு

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

பாத்திரங் கொண்டுமே பலிஇ ரப்போம்

பத்தெட்டு மூன்று படிகடந்தோம்

ஊத்தைச் சடத்தினைப் புடமே இடுவோம்

உளவன் எமக்குநல் உறுதிசொல்லப்

பார்த்துரை இதன் மெய்பலிக்க எண்ணிப்

பதனம் பதனம் என்று ஆடு பாம்பே

129 தொகு

மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்

மணிவட்ட வாசியை வாரி உண்போம்

வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்

வக்கிர சொப்பனந் தாண்டி விடுவோம்

பவ்வ வெளியிலே விட்டே ஆட்டுவோம்

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுரு வாகியே நின்றோம் என்றே

சீர்பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே
  • முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பாம்பாட்டிச்_சித்தர்&oldid=493284" இலிருந்து மீள்விக்கப்பட்டது