பாரதியாரின் தனிப்பாடல்கள்/10. ஒளியும் இருளும்

10 ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!

நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!