பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/12. நல்லதோர் வீணை

12. நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே-அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி;-எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ,-இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி,சிவசக்தி!-நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன்-நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும்-சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்;-இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2