பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/22. சக்தி விளக்கம்

22. சக்தி விளக்கம்


ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை

அன்னை எனப்பணிதல் ஆக்கம்,

சூதில்லை காணும்இந்த நாட்டீர் ! - மற்றத்

தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த

மூன்று புவியும் அதன் ஆட்டம்

காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்

காளிநடம் உலகக் கூட்டம்

காலை இளவெயிலின் காட்சி - அவள்

கண்ணொளி காட்டுகின்ற மாட்சி

நீள விசும்பின்இடை இரவில் - சுடர்

நேமி அனைத்தும் அவள் ஆட்சி

நாரணன் என்று பழவேதம் - சொல்லும்

நாயகன் சக்தி திருப்பாதம்,

சேரத்தவம் புரிந்து பெறுவார் - இங்குச்

செல்வம் அறிவு சிவபோதம்

ஆதிசிவனுடை சக்தி - எங்கள்

அன்னை அருள்பெறுதல் முக்தி ;

மீதி உயிர்இருக்கும் போதே - அதை

வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

பண்டை வி தியுடைய தேவி - வெள்ளை

பாரதி அன்னை அருள் மேவி

கண்ட பொருள்விளக்கும் நூல்கள் - பல

கற்றல் இல்லாதவன்ஓர் பாவி

மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று - அந்த

மூலப்பொருள் ஒளியின் குன்று

நேர்த்தி நிகழும்அந்த ஒளியை - எந்த

நேரமும் போற்றுசக்தி என்று